சேலம் ஏ.வி.ஆர் ரவுண்டானா பகுதியில் உள்ள ஒரு தனியார் கட்டிடத்தில் போலி இயக்குநர் வேல்சத்ரியன் மற்றும் பெண் உதவியாளர் ஜெயஜோதி ஆகியோர் சினிமா அலுவலகம் நடத்திவந்துள்ளனர். சில தினங்களுக்கு முன்பு சேலத்தை சேர்ந்த பெண் ஒருவர் வேல்சத்ரியன் மற்றும் ஜெயஜோதி மீது புகார் அளித்தார். அப்புகாரில் இளம்பெண்களை சினிமாவில் நடிகையாக்குவதாக கூறி ஆபாச படங்கள், வீடியோக்கள் எடுத்துள்ளனர் என குறிப்பிட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கேட்டுள்ளார்.
புகாரின் அடிப்படையில் அந்த சினிமா அலுவலகத்திற்கு சென்ற காவல்துறையினர் வேல்சத்ரியன் மற்றும் ஜெயஜோதி ஆகியோரை கைது செய்தனர். பின்பு அலுவலகத்தை சோதனை செய்த காவல்துறையினர் 30-க்கும் மேற்பட்ட ஹார்டு டிஸ்குகள், கணினி, லேப்டாப், கேமிராக்ககள் , பென் டிரைவ்கள் பறிமுதல் செய்தனர். அதில் 300க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச படங்கள் இருப்பதாகவும், அப்பெண்களை மிக மோசமாக படமெடுத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மேலும் சேலம், கோவை, திருப்பூர், கள்ளக்குறிச்சி, சென்னை, கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வந்து இளம்பெண்கள் ஏமாந்து உள்ளனர்.
இதனிடையே இளம்பெண்ணின் தாயாரிடம் மற்றும் மற்றோரு இளம்பெண்ணிடம் வேல்சத்ரியன் சினிமா குறித்து பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. இயக்குனர் மீது பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுத்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், 20-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆன்லைனில் புகார் கொடுத்துள்ளதாக கூறப்டுகிறது. அந்த ஹார்டு டிஸ்குகளில் இருக்கும் இளம்பெண்களின் ஆபாச படங்களை, ஆபாச இணையத்தளத்திற்கு வேல்சத்ரியன் விற்பனை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.