மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான 'கர்ணன்' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. அத்தோடு மட்டுமில்லாமல், ரசிகர்கள், திரைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பாராட்டினார். தனுஷ் தற்போது செல்வராகவன் இயக்கிவரும் நானே வருவேன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கர்ணன் திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி 'நானே வருவேன்' படப்பிடிப்பில் தனுஷ், மாரி செல்வராஜ், தாணு உள்ளிட்ட படக்குழுவினர் ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள தனுஷ், "கர்ணன் பிளாக்பஸ்டர் படம் வெளியாகி ஓராண்டுகள் ஆகிவிட்டது. இது என் மனதிற்கு நெருக்கமான படம். இது எல்லாவற்றிக்கும் காரணமான மாரி செல்வராஜ், தாணு சார், சந்தோஷ் நாராயணன் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.