தெலுங்கில், சிரஞ்சீவி, தமன்னா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'போலா ஷங்கர்'. இப்படம் தமிழில் அஜித் நடித்த 'வேதாளம்' படத்தின் ரீமேக் ஆகும். இதில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் மற்றும் அஜித்தின் தங்கை கதாபாத்திரத்தில் லக்ஷ்மி மேனன் நடித்திருந்த நிலையில், தெலுங்கில் தமன்னா கதாநாயகியாகவும், கீர்த்தி சுரேஷ் தங்கை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்கள். மெஹர் ரமேஷ் இயக்கியுள்ள இப்படம் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போய் வருகிற 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
அதனால் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் அதில் சிரஞ்சீவி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டு பேசினர். அப்போது பேசிய சிரஞ்சீவி படம் குறித்து நிறைய விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.
அதன் ஒரு பகுதியில், "போலா ஷங்கர் கதை எனக்குப் பிடித்திருந்தது. உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்பி நடித்துள்ளேன். என்னிடம் நிறைய பேர் ஏன் தொடர்ந்து ரீமேக் படங்கள் எடுத்து வருவதாக கேட்கிறீர்கள். அது ஏன் என எனக்குப் புரியவில்லை. வலுவான கதை இருந்தால், அதைத் தெலுங்கு மக்களிடம் கொண்டு சேர்க்க இயக்குநர்களும் நடிகர்களும் விருப்பப்படுகிறார்கள். அந்த வாய்ப்பை பயன்படுத்துகிறார்கள். அதில் என்ன தவறு இருக்கிறது. ஓடிடி தளங்களின் வருகைக்குப் பிறகு பல்வேறு விதமான ஜானரில் மக்கள் படங்களைப் பார்க்கிறார்கள். இந்தச் சூழலில் படங்களை ரீமேக் செய்யும் அவசியம் ஏன் எனக் கேட்கின்றனர். வேதாளம் படம் எந்த ஓடிடி தளத்திலும் இல்லை. அதுவே எங்களுக்கு படம் பண்ண நம்பிக்கை கொடுத்தது" என்றார்.