அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜவான்' படம் கடந்த 7 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாகத் திரையரங்குகளில் வெளியானது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகியுள்ள இப்படத்தை ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து திரையரங்குகளில் ஆட்டம் ஆடி மகிழ்கின்றனர். இருப்பினும் கலவையான விமர்சனங்களையே இப்படம் பெற்று வசூல் ரீதியாகச் சாதனை படைத்து வருகிறது. இதுவரை இந்தியாவில் மட்டும் ரூ. 560 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் உலகம் முழுவதும் இப்படம் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகப் படக்குழு ஒரு சிறிய வீடியோ மூலம் அறிவித்துள்ளது. மேலும் வரலாறு படைத்து வருவதாகத் தெரிவித்துள்ளது. இதன் மூலம் 1000 கோடி வசூலித்த முதல் தமிழ் இயக்குநர் என்ற பெருமையை அட்லீ படைத்துள்ளார். அவருக்கு திரைப் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் நன்றி தெரிவித்து பதிவிட்ட அட்லீ, "கடவுள் நம்மிடம் மிகவும் அன்பாக இருக்கிறார்" எனக் குறிப்பிட்டு படக்குழு வெளியிட்ட வீடியோவை பகிர்ந்துள்ளார்.