இவரது மறைவு திரைத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டேனியல் பாலாஜியின் மறைவு செய்தி அறிந்த இயக்குநர்கள் கௌதம் மேனன், வெற்றிமாறன், அமீர் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக அவருடைய உடல் வைக்கப்பட்டுள்ளது. டேனியல் பாலாஜி ஏற்கனவே கண்களை தானம் செய்திருந்த நிலையில் அவருடைய கண்கள் தானமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
திரைத்துறை சார்ந்த பிரபலங்கள் அவரது மறைவுக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கமல்ஹாசன், ராதிகா, ஆண்ட்ரியா, சந்தீப் கிஷன், மோகன் ராஜா உள்ளிட்டவரகள் இரங்கல் தெரிவித்ததை அடுத்து தற்போது டேனியல் பாலாஜியின் அண்ணன் முரளியின் மகனும் நடிகருமான அதர்வா, “வாழ்வில் நமக்கானவர்கள்தான் மிகவும் முக்கியம் என நினைக்கவைத்த மற்றொரு நாள் இது. நாம் இன்னும் ஒன்றாக அதிக நேரம் செலவிட்டிருக்கலாம் என நினைக்கிறேன். ஆழ்ந்த இரங்கல் பாலாஜி சித்தப்பா” என குறிப்பிட்டுள்ளார். மேலும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.