ADVERTISEMENT

“விஜயகாந்த் விட்டதை தொடர்ந்து பண்ணுவேன்” - அருண் விஜய் எடுத்த முடிவு

05:28 PM Jan 04, 2024 | kavidhasan@nak…

நடிகர், தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணத்தால் உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

மேலும், அவரது இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். விஜயகாந்த்தின் உடலுக்கு ரஜினி, கமல், விஜய், இளையராஜா என பல்வேறு திரைப்பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். சூர்யா, பாரதிராஜா உள்ளிட்ட சிலர் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு வருத்தம் தெரிவித்தனர். பின்பு 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் சென்னை கோயம்பேடு அருகே உள்ள தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இந்த நிலையில் விஜயகாந்த்தின் நினைவிடத்தில் திரைப் பிரபலங்கள் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் சென்னையில் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில், விஜயகாந்த் உருவப்படத்திற்கு மரியாதை செய்துவிட்டு, விஜயகாந்த்தின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். அந்த வகையில் விஜயகாந்த்தின் நினைவிடத்தில் அருண் விஜய் கையில் கட்டு போட்டபடி, வந்து அஞ்சலி செலுத்தினார். பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசுகையில், “சண்டை பயிற்சியில் எனக்கு ஒரு விபத்து. சிகிச்சை காரணமாக விஜயகாந்த் சாரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. ஒன்றரை மாசத்துக்கு பிறகு இப்பதான் வெளியில் வரேன். முதல்ல அவருக்கு வந்து மரியாதை செய்ய வேண்டும் என நினைத்ததால் இங்கு வந்திருக்கேன்.

விஜயகாந்த் சார் எனக்கு ஒரு பெரிய இன்ஸ்பிரேஷன். சின்ன வயசுல இருந்து அவருடைய படங்கள் பார்த்து வளர்ந்திருக்கேன். அவருடைய சண்டை காட்சிகளை ரசிச்சிருக்கோம். அவரது சண்டையில் ஒரு தனித்துவம் இருக்கும். அதனால் தான் தனி இடத்தை திரையுலகில் அவர் பிடிச்சிருந்தார். நிறைய பேர் திரையுலகத்திற்கு வரும்போது ரஜினி சார் போன்றும், கமல் சார் போன்றும் வர ஆசைப்படுவார்கள். ஆனால் எனக்கு, விஜயகாந்த் சார் மாதிரி சண்டையில் எதாவது புதுசா செஞ்சு, மக்கள் மனதில் இடம் பெற வேண்டும் என ஆசைப்பட்டேன். அந்த எண்ணத்தில் தான் திரையுலகத்திற்கு வந்தேன். அதனால் அவருடைய இழப்பு எனக்கு மிகப்பெரிய இழப்பு. எவ்வளவோ நல்ல விஷயங்கள் திரையுலகத்திற்கு பண்ணியிருக்கார். இப்படி ஒரு சிறந்த மனிதரை தமிழ் திரையுலகமும் தமிழ் நாட்டு மக்களும் இழந்துட்டோம்.

விஜயகாந்துடன் பணியாற்றிய நிறைய ஸ்டண்ட் மாஸ்டர்களுடன் நான் பணியாற்றியுள்ளேன். அவர்கள் விஜயகாந்த் சார் பற்றி நிறைய சொல்வார்கள். ஒரு கட்டத்தில், என்னுடைய சண்டையை கேள்விப்பட்டு அழைச்சு, உட்கார வைச்சு பாராட்டினார். நிறைய அறிவுரை வழங்கினார். அது ஒரு பெரிய ஊக்கமா இருந்துச்சு. அப்படி நல்ல மனசை திருப்பி பார்க்கமுடியுமா என்று தெரியவில்லை. அவர் செய்த நல்ல விஷயங்களை மற்றவர்களும் பின்பற்ற வேண்டும் என நினைப்பார். அதனால் இனி வரும் காலங்களில், என்னுடைய படப்பிடிப்பு தளத்தில் பின்பற்ற வேண்டும் என நினைக்கிறேன். அது எங்களுக்காக விட்டுட்டு போன விஷயம். அதை தொடர்ந்து பண்ண வேண்டும். கண்டிப்பா அதை பண்ணுவேன். நடிகர் சங்க வளாகத்தை திருப்பி மீட்டு கொடுத்தவர் விஜயகாந்த். அதனால் அதன் ஒரு அங்கத்திலாவது அவருடைய பெயர் இருக்க வேண்டும் என்பது கோரிக்கை” என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT