தமிழில் மாறுபட்ட கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் அருள்நிதி தற்போது 'டிமான்ட்டி காலனி - 2' படத்தில் நடித்து வருகிறார். அஜய் ஞானமுத்து தயாரித்து இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் பாரதிராஜாவுடன் இணைந்து 'திருவின் குரல்' படத்தில் நடித்து வருகிறார். ஹரிஷ் பிரபு இப்படத்தை இயக்க லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அருள்நிதி நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தை ராட்சசி பட இயக்குநர் கௌதமராஜ் இயக்க 'கழுவேத்தி மூர்க்கன்' என படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கதாநாயகியாக துஷாரா விஜயன், முக்கிய கதாபாத்திரத்தில் சந்தோஷ் பிரதாப், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். போஸ்டரை பார்க்கையில் பெரிய மீசையுடன் கையில் அரிவாளை எடுத்துக்கொண்டு கோபத்துடன் செல்வது போன்று அமைந்துள்ளது. மேலும் கிராமத்து பின்ணணியில் கதை உருவாவது போல் தெரிகிறது.
இந்த போஸ்டரை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அருள்நிதியின் லுக் மிகவும் பிடித்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.