ADVERTISEMENT

வழக்கை முடித்த முருகதாஸ், வழிக்கு வராத ஷங்கர்!

05:23 PM Oct 31, 2018 | vasanthbalakrishnan

கடந்த ஒரு வாரமாக 'சர்கார்' கதை குறித்த திருட்டு குற்றச்சாட்டும் அதை தொடர்ந்து இரு தரப்பிலும் இருந்து தரப்பட்ட பேட்டிகளும் விளக்கங்களும் வாதங்களும் தமிழ் சினிமா வட்டாரத்தையும் ரசிகர்களையும் பரபரப்பாக வைத்திருந்தன.

ADVERTISEMENT



இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது ஏற்கனவே 'கத்தி' திரைப்படத்தின் கதை தன்னிடம் இருந்து திருடப்பட்டது என்று 'கோபி நயினார் புகார் செய்ததும், வழக்கு தொடர்ந்ததும் பின்னர் அது அவருக்கு பலனளிக்காமல் போனதும் நடந்தது. அதன் பின்னர், தன் கடும் முயற்சியால் நயன்தாராவை வைத்து 'அறம்' படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்று அதில் தன்னை நிரூபித்தார் கோபி நயினார். மெட்ராஸ், கத்தி படங்களின் கதை தன்னுடையது என்று அவர் கூறிய போது அவரை கிண்டல் செய்தவர்கள் அனைவரும் 'அறம்' பார்த்துவிட்டு அவர் கூறியதில் உண்மை இருக்குமோ என்று எண்ணினார்கள். 'கஜினி' படத்தில் பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிரிஸ்டோஃபர் நோலனின் 'மெமென்டோ' படத்தின் சாயல் இருந்தது குறித்து அப்போது பேச்சுகள் எழுந்தன. பின்னொரு பேட்டியில் இந்தி நடிகர் அனில் கபூர், இது குறித்து கிரிஸ்டோஃபர் நோலன் தன்னிடம் அடித்த கமெண்டை பகிர்ந்தார்.

இப்படி ஏ.ஆர்.முருகதாஸ், கதை குறித்த புகார்களை ஏற்கனவே சந்தித்திருந்தாலும், சர்கார் பட விவகாரத்தில் புகாரை எழுப்பிய எதிர் தரப்பு சற்று பலமாகவே இருந்தது. திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே பதிவு செய்யப்பட்ட அந்தக் கதை சர்கார் படத்தின் கதையென முருகதாஸ் கூறிய கதையோடு மிக நெருக்கமாக ஒத்துப்போனதை சங்கம் கடிதமாகவே நீதிமன்றத்தில் அளித்தது. சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜ், ஊடகங்களிடமும் இதை வெளிப்படையாகவும் உறுதியாகவும் கூறினார். இதனால் வேறு தேர்வுகள் இல்லாமல் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தரப்பும் புகார் எழுப்பிய வருண் ராஜேந்திரனுடன் சமாதானமாக செல்வதாக முடிவெடுத்து, அவரது பெயரில் 'நன்றி' கார்டு போடப்படும் என்றும் அவர் கோரிய முப்பது லட்ச ரூபாய் பணத்தை கொடுப்பது என்றும் ஒத்துக்கொண்டனர். இதனால் இந்தப் பிரச்சனை முடிவுக்கு வந்தது.

ADVERTISEMENT



ஏ.ஆர்.முருகதாஸ் போல பிற முக்கிய இயக்குனர்கள் சிலரும் அவ்வப்போது கதை விஷயத்தில் புகார்களை சந்தித்துள்ளனர். இளம் இயக்குனர்களில் வணிக வெற்றிகளைப் பெற்று வரும் அட்லீ, முதல் படத்திலிருந்தே பழைய தமிழ் படங்களின் கதையைப் பயன்படுத்துவதாகக் கூறப்பட்டு வந்தது. சமீபத்தில் இவரது 'மெர்சல்' படத்தின் கதை 'மூன்று முகம்' படத்தின் கதை என்று அந்தப் படத்தின் ரீமேக் ரைட்ஸ் வாங்கிய தயாரிப்பாளர் கதிரேசன் புகார் எழுப்பியதோடு, தயாரிப்பாளர் சங்கத்தில் அட்லீயை வரவழைத்து பஞ்சாயத்து நடந்ததாகத் தகவல் வெளியானது.

அட்லீயின் குருவான இந்தியாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராகக் கருதப்படும் ஷங்கரும் கதை புகாருக்கு அப்பாற்பட்டவரல்ல. கடந்த 2010ல் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் திரைப்படம் வெளியானது. அப்போது, 1996 - லேயே 'இனிய உதயம்' இதழில் நக்கீரன் தலைமைத் துணை ஆசிரியரும், கவிஞருமான ஆரூர் தமிழ்நாடன் எழுதிய 'ஜூகிபா' என்ற கதையைத் திருடி இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது என ஆரூர் தமிழ்நாடன் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில், உயர்நீதிமன்றம் ஷங்கரை ஆஜராக உத்தரவிட்டும் இதுவரை ஆஜராகாமல் காலம் கடத்தி வருகிறார் இயக்குனர் ஷங்கர். அந்த வழக்கு எப்போது முடியுமென்பது கேள்வியாக தொடர்கிறது.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT