ஆக்ஷன், க்ரைம் படங்களுக்குப் பெயர் பெற்ற ஆக்சன் கிங் அர்ஜூன் மீண்டும் ஒரு வித்தியாசமான க்ரைம் திரில்லர் படத்தில் நடிக்கவுள்ளார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கும் இப்படத்தை ஜி.எஸ் ஆர்ட்ஸ் தயாரிப்பாளர் ஜி.அருள் குமார் தயாரித்து, இயக்குனர் தினேஷ் லக்ஷ்மணன் இயக்குகிறார். பிரவீன் ராஜா, 'பிராங்க்ஸ்டர்' ராகுல், 'பிக்பாஸ் 3' அபிராமி வெங்கடாசலம் உட்பட பல முக்கிய பிரபலங்கள் இணைந்து நடிக்கும் இப்படம் குறித்து தயாரிப்பாளர் ஜி.அருள் குமார் படம் கூறும்போது...
"இது ஒரு க்ரைம் -த்ரில்லர் இன்வெஸ்டிகேஷன் கதை. ஆக்ஷன் கிங் அர்ஜுன் இப்படத்தில் விசாரணை அதிகாரியாக நடிக்கிறார். இது மன இறுக்கம் கொண்ட ஆட்டிஸ்டிக் குழந்தைகளின் பின்னணியில் ஒரு பெண் கதாப்பாத்திரத்தை மையமாகக் கொண்ட திரைப்படம். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரது கதாப்பாத்திரம் படத்தில் மிகவும் முக்கியத்துவம் மிகுந்த கதாப்பாத்திரமாகும். இயக்குனர் தினேஷ் லக்ஷ்மணன் திரைக்கதையை முதன்முதலில் விவரித்தபோது, நான் பார்வையாளராக மிகவும் ரசித்தேன். திரையரங்குகளில் இப்படத்தைப் பார்க்கும் பார்வையாளர்களுக்கு, நீண்ட காலத்திற்குப் பிறகு க்ரைம்-த்ரில்லர் இன்வெஸ்டிகேஷன் வகைகளில் ஒரு புதிய அனுபவத்தை இப்படம் தரும். நடிகர் அர்ஜுன் இந்த வகையைச் சேர்ந்த திரைப்படங்களில் அதிகம் நடித்திருந்தாலும், இப்படம் அதிலிருந்து மாறுபட்டு, தனித்துவமாகவும் வித்தியாசமாகவும் இருக்கும்" என்றார்.