Skip to main content

கிரிக்கெட் வீரர் பின்னணி குரலில் வெளியான ஜி.வி பிரகாஷ் பட ட்ரைலர்

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
ravichandran ashwin gives voice over to gv prakash aishwarya rajesh dear movie trailer

ஜி.வி. பிரகாஷ் நடிகராக ரெபல், இடி முழக்கம், 13, கள்வன், டியர், கிங்ஸ்டன் உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இசையமைப்பாளராக தங்கலான், அமரன், சூர்யாவின் 43வது படம் உள்ளிட்ட படங்களில் பணியாற்றுகிறார். இதில் ரெபல் படம் கடந்த மாதம் 22ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. பின்பு கள்வன் படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்திற்கு வைரமுத்து, வசந்தபாலன், ஆர்யா உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.  

இப்படி தொடர்ந்து ஜி.வி பிரகாஷ் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இந்த சூழலில் டியர் படமும் ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. ஆனந்த ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் ஜி.வி பிரகாஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிசெட்டி, பிரித்விராஜ் என மூன்று பேர் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷே இசையமைத்துள்ளார். 

ravichandran ashwin gives voice over to gv prakash aishwarya rajesh dear movie trailer

இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ட்ரைலரில் இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின் ரவிச்சந்திரன் பிண்ணி குரல் கொடுத்துள்ளார். ஜி.வி பிரகாஷுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் திருமணம் நடக்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் அதிக அளவு குறட்டை விடும் நபராக இருக்கிறார். அதனால் இருவருக்கும் ஏற்படும் பிரச்சனைகளை மையப்படுத்தி காமெடி கலந்த ட்ராமாவாக இப்படம் உருவாகியுள்ளது போல் அமைந்துள்ளது. இப்படம் வருகிற 11ஆம் தேதி திரைக்கு வருகிறது. ட்ரைலர் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. இதே குறட்டை பிரச்சனையை மையப்படுத்தி மணிகண்டன் நடிப்பில் கடந்த ஆண்டு குட் நைட் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

Next Story

பவுலர்களைக் காப்பாற்றுங்கள்; கதறிய பந்து வீச்சாளர்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

Save the bowlers; famous spinner reacts

ஐபிஎல்2024 இன் 42ஆவது லீக் ஆட்டம் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. 261 ரன்கள் சேஸ் செய்யப்பட்ட நேற்றைய ஆட்டம் ஒரு பேட்டிங் ட்ரீட் என்றால் அது மிகையாகாது. ஆனால் பந்து வீச்சாளர்களின் நிலைதான் மிகவும் பரிதாபாகரமாக அமைந்தது. தற்போது பந்து வீச்சாளர் ஒருவர் நேற்றைய போட்டி பற்றி தெரிவித்த கருத்து வைரலாகி வருகிறது.

ஐபிஎல்2024 இன் 42ஆவது லீக் ஆட்டம் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி நரைன், சால்ட் அதிரடியால் முதல் 10 ஓவர்களில் 137 ரன்கள் குவித்தது.

இருவரும் அரைசதம் கடந்தனர். நரைன் 71, சால்ட் 75 என சிறிய இடைவெளியில் இருவரும் ஆட்டமிழக்க அடுத்து வந்த வெங்கடேஷ் ஐயர் 39 (23), ரசல் 24(12), ஸ்ரேயாஸ் ஐயர் 28(10) என அவர்கள் பங்குக்கு சில சிக்சர்களையும், பவுண்டரிகளையும் பறக்க விட கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 261 ரன்கள் குவித்தது. 

பின்னர் 262 ரன்கள் எனும் வரலாற்று இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு பேர்ஸ்டோ, பிரப்சிம்ரன் சிங் இருவரும் இணைந்து பந்து வீச்சாளர்களை பதம் பார்த்து முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்தனர். பிரப்சிம்ரன் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பேர்ஸ்டோ 108 என மிரட்ட, சஷாங்க் சிங் ஈடன் கார்டன் மைதானத்தின் மூலை முடுக்கெல்லாம் தன் அட்டகாசமான பேட்டிங்கால் பந்துகளை சிக்சர்களாக மாற்றி 28 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். இதில் 8 சிக்சர்களும் அடங்கும். இதன் மூலம் பஞ்சாப் அணி 18.4 ஓவர்களிலேயே 262 ரன்களை எடுத்து சாதனை வெற்றி பெற்றது. ஐபிஎல் போட்டிகளில் சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கு இதுவாகும். 

இப்படி அதிக ஸ்கோர்கள் தொடர்ந்து அடிக்கப்படுவதும், அவை எளிதில் சேஸ் செய்யப்படுவதும் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது. கிரிக்கெட் முற்றிலுமாக பேட்ஸ்மேன்கள் விளையாட்டாக மாறி வருகிறதென்றும், இது கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல என்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இப்படி பேட்டிங்குக்கு சாதகமாக அமைக்கப்படும் பிட்சுகள் இப்போதைய கொண்டாட்டத்துக்கு வேண்டுமானால் உதவுமென்றும், இது இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை தொடர்களில் வெல்ல உதவாது என்றும் பலரும் விமர்சித்து வந்தனர். தற்போது இந்திய பந்துவீச்சாளர் ஒருவரே அதுபற்றி வாய் திறந்திருப்பது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Save the bowlers; famous spinner reacts

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மூத்த வீரருமான அஸ்வின் தற்போது இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளார். தனது சமூக வலைத்தளப்பக்கமான எக்ஸ்-ல் “தயவுசெய்து யாராவது பந்து வீச்சாளர்களைக் காப்பாற்றுங்கள் “ என்றும், “ 260+ சேசிங்கில் கடைசி இரண்டு ஓவர்களுக்கு ஒரு பந்தில் ஒரு ரன் எடுத்தால் போதும் என்ற நிலை. இது மூழ்கட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவின் கீழ் ரசிகர்கள் பலரும் தங்களது விமர்சனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Next Story

மீண்டும் கவர்ந்ததா குறட்டை செண்டிமெண்ட்? - டியர் விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
gv prakash aishwarya rajesh starring dear movie review

குறட்டையால் ஏற்படும் பிரச்சனையை மையமாக வைத்து கடந்த வருடம் வெளியான குட் நைட் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அதே கதைக்கருவை வைத்துக்கொண்டு குடும்பத்திற்குள் நடக்கும் குழப்பங்களை நேர்த்தியாக எடுத்துச் சொல்லும் திரைப்படமாக வெளியாகி இருக்கும் டியர் திரைப்படம் ரசிகர்களை எந்த அளவுக்கு ஈர்த்தது? 

மலைப்பிரதேசத்தில் வசிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தூக்கத்தில் குறட்டை விடும் வியாதி இருக்கிறது. இதனால் அவருக்கு மாப்பிள்ளை கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இதற்கிடையே டிவியில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் ஜிவி பிரகாஷ் தன் அம்மா, அண்ணன் வற்புறுத்தலின் பேரில் ஐஸ்வர்யா ராஜேஷை மணம் முடிக்கிறார். சிறிது சத்தம் கேட்டாலும் தூக்கத்தில் எழுந்து கொள்ளும் பழக்கம் இருக்கும் ஜிவி பிரகாஷுக்கு ஐஸ்வர்யா ராஜேஷின் குறட்டை மிகப்பெரிய இடியாக வாழ்க்கையில் வந்து விழுகிறது. இதனால் இருவருக்குள்ளும் பிளவு ஏற்படுகிறது. இந்தப் பிளவு நாளடைவில் விவாகரத்து வரை சென்று விட இதன் பிறகு இருவரும் விவாகரத்து பெற்றார்களா? அல்லது மீண்டும் இணைந்தார்களா? என்பதே இப்படத்தின் மீதி கதை. 

gv prakash aishwarya rajesh starring dear movie review

நாம் இதற்கு முன் இதே போன்ற ஒரு கதையை பார்த்து இருப்பதால் கதையில் பெரிய சுவாரசியம் இருப்பதாக தோன்ற மனம் மறுக்கிறது. அதேபோல் இதற்கு முன் வெளியான படத்தில் நாயகனுக்கு குறட்டை பிரச்சனை, இந்த படத்தில் நாயகிக்கு குறட்டை பிரச்சனை. மற்றபடி கதைக்கும் திரைக்கதைக்கும் வேற எந்த சம்பந்தமும் இல்லாமல் இந்த படம் வேறு ஒரு டிராக்கில் பயணிக்கிறது. வெறும் ஒரே ஒரு குறட்டையை வைத்துக் கொண்டு 2:30 மணி நேரம் படத்தை சுவாரஸ்யமாக கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன். அந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா என்றால் சற்று சந்தேகமே! ஒரு புதுமண தம்பதிக்கு திருமணம் நடந்த பிறகு அவர்கள் வெறும் தூக்கத்திற்கு மட்டும் ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? அதேபோல் ஒரு குறட்டை என்று வரும் பட்சத்தில் அதிலிருந்து விடுபடும் நோக்கில் காதில் பஞ்சு வைத்துக் கொள்ளலாமே? போன்ற கேள்விகள் படம் பார்ப்பவர்கள் மனதில் எழ செய்வதை தவிர்க்க முடியவில்லை. அதேபோல் படம் ஆரம்பித்து ஒரு நகைச்சுவை படமாகவும் இல்லாமல், ஒரு சீரியசான படமாகவும் இல்லாமல் இரண்டுக்கும் நடுவே பயணிப்பது சற்றே அயற்சியை கொடுத்து இருக்கிறது. அதே போல் எந்த ஒரு இடத்திலும் பெரிதாக திருப்பங்கள் இல்லாமல் படம் பிளாட்டாக செல்வது சுவாரசியத்தை குறைத்து இருக்கிறது.

ஜீவிக்கும் ஐஸ்வர்யாவுக்கும் கெமிஸ்ட்ரியும் பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை. படத்தின் டைட்டிலுக்கு கொடுத்த கிரியேட்டிவிட்டியின் முக்கியத்துவத்தை இயக்குநர் ரவிச்சந்திரன் திரைக்கதைக்கும் கொடுத்திருந்தால் இந்தப் படம் நன்றாக பேசப்பட்டிருக்கும். வழக்கமான நாயகனாக வந்து செல்கிறார் நாயகன் ஜி.வி பிரகாஷ். அவருடைய தோற்றத்திலும் நடிப்பிலும் எந்த ஒரு மாற்றமும் இன்றி முந்தைய படங்களில் என்ன செய்தாரோ அதையே இந்த படத்திலும் செய்திருக்கிறார். நடிக்க நன்றாக ஸ்கோப் இருந்தும் அதை சரியாக பயன்படுத்த தவறியிருக்கிறார் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ். இயக்குநர் இவரை இன்னும் நன்றாக பயன்படுத்தி இருக்கலாம். ஒரு நல்ல நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஏன் இந்த மாதிரியான கதைகளை தேர்வு செய்கிறார் என்ற குழப்பம் ரசிகர்களிடையே நிலவுகிறது. அதேபோல் தனது தோற்றத்திலும் சற்றே முதிர்ச்சியுடன் காணப்படுகிறார். ஜிவி பிரகாஷை விட இவருக்கு வயது அதிகம் போல் தெரிகிறது. இதனாலேயே இருவருக்குமான கெமிஸ்ட்ரி சரியாக ஒர்க் அவுட் ஆகவில்லை.

gv prakash aishwarya rajesh starring dear movie review

படத்தின் ஒரே ஒரு ஆறுதல் காளி வெங்கட்டின் நடிப்பு. தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்து கைதட்டல் பெற்று இருக்கிறார். ஜீவியின் அம்மாவாக வரும் ரோகிணி தனக்கு கொடுத்த வேலையை செய்திருக்கிறார். மற்றபடி முக்கிய கதாபாத்திரத்தில் வரும் மற்ற முன்னணி நடிகர்கள் அனைவருமே அவரவர் வேலையை நிறைவாக செய்திருக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையில், இந்த படத்துக்கு ஜீவிதான் இசையா என்ற கேள்வி எழுப்பும் அளவிற்கு இசையை கொடுத்திருக்கிறார். அந்த அளவுக்கு சுமாரான இசையை படம் முழுவதும் அள்ளித் தெளித்திருக்கிறார். ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவில் ஐஸ்வர்யா ராஜேஷ் வீடு சம்பந்தப்பட்ட காட்சிகளும் ஜீவியின் ஆபீஸ் சம்பந்தப்பட்ட காட்சிகளும் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

நாம் ஏற்கனவே பார்த்துப் பழகிய ஒரு வரிக் கதையை வைத்துக் கொண்டு 2.30 மணி நேரம் படத்தை ரசிக்க வைக்க முயற்சி செய்த இயக்குநர் இந்த படத்திற்கான டைட்டிலுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை சற்று திரைக்கதைக்கும் கொடுத்து இருக்கலாம். 


டியர் - பாவம்!