பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான், ரோஜா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, தமிழ், இந்தி, தெலுங்கு என பிற மொழி படங்களுக்கும் இசையமைத்து வந்த ஏ.ஆர்.ரஹ்மான் மிகக் குறுகிய காலத்திலேயே இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளரானார். மேலும், 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தின் இசைக்காக பெரிதும் பேசப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மான், அப்படத்திற்காக இரு ஆஸ்கார் விருதுகளையும் வென்றார். இசைத்துறையில் புகழின் உச்சிக்கே சென்றுள்ள ஏ.ஆர் ரஹ்மான் இன்று தனது 55 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரின் பிறந்தநாளுக்கு ரசிகர்கள், திரைபிரபலங்கள் என பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் ட்வீட் செய்துள்ளார். அத்துடன் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு யூடியூப் நேரலையில் ரசிகர்களை சந்திக்க இருப்பதாகவும், அவர்களின் சில கேள்விகளுக்கு பதிலளிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.