செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தின் முதல் பாகம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் ‘புஷ்பா தி ரூல்’ என்ற தலைப்பில் தற்போது உருவாகி வருகிறது. படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முன்னோட்ட வீடியோ, கடந்த ஆண்டு அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது. ஆகஸ்ட் 15ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 74வது பெர்லின் சர்வதேச திரைப்படவிழாவில் புஷ்பா படம் திரையிடப்படுகிறது. இதில் கலந்து கொண்ட அல்லு அர்ஜுன், புஷ்பா படத்தின் மூன்றாம் பாகம் குறித்து பேசியுள்ளார். இது தொடர்பாக பிரபல ஆங்கில இணையதளத்திற்கு பேட்டியளித்த அவர், “நிச்சயமாக புஷ்பா படத்தின் மூன்றாம் பாகத்தை எதிர்பார்க்கலாம். நாங்கள் அதை ஒரு தொடராக உருவாக்க விரும்புகிறோம். அற்புதமான யோசனைகளும் திட்டங்களும் அடுத்தடுத்து உள்ளன. புஷ்பா 1 இல் பார்த்ததை விட புஷ்பா 2வில் வித்தியாசமான புஷ்பாவை பார்ப்பீர்கள். அதைவிட பெரிய படமாகவும் இருக்கும்” என்றார்.