ADVERTISEMENT

"ரஹ்மான் சாரிடம் கிடைத்த அந்தப் பாராட்டு ரொம்பவும் ஸ்பெஷல்" - நடிகை ரவீனா ரவி நெகிழ்ச்சி

06:39 PM Feb 08, 2022 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கத்தில் விஷால், டிம்பிள் ஹயாத்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 4ஆம் தேதி வெளியான “வீரமே வாகை சூடும்” திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. இந்த நிலையில், படத்தில் விஷாலுக்கு தங்கையாக நடித்திருந்த நடிகை ரவீனா ரவியை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்த சந்திப்பில் அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

"வீரமே வாகை சூடும்” படத்தில் தங்கச்சியை சுற்றித்தான் கதை இருக்கும். அதனால்தான் தங்கை கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டேன். படத்தின் ரிவியூஸ் பார்க்கும்போதும் அனைவரும் அதுதான் சொல்கிறார்கள். படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஷால் ரொம்பவும் சப்போர்ட்டாக இருந்தார். என்னை பரதேசி என்றுதான் கூப்பிடுவார். இப்படி நில்லு, இப்படி அழுதா நல்லா இருக்கும், இப்படி பார்த்தா நல்லா இருக்கும் என்று அவருடைய அனுபவத்தில் இருந்து நிறைய கற்றுக்கொடுத்தார். படப்பிடிப்பு தளமே பயங்கர ஜாலியாக இருந்தது. அழுகிற சீனுக்காக கண்ணில் க்ளிசரின் போட்டு தயாராக இருப்பேன். யோகிபாபு சார் பேசுறதைக் கேட்டு சிரிப்பு வந்துரும். அவர் சீரியஸா பேசினாலும் எனக்கு சிரிப்பு வந்துரும். அதுனாலே சில சீன்ல நிறைய டேக் வாங்கினேன்.

சின்ன வயதிலிருந்தே அம்மாவைவிட அப்பாவிடம்தான் நான் அதிகம் நெருக்கமாக இருந்தேன். என்னை ஸ்டூடியோ அழைத்துச் செல்வதும் அப்பாதான். கோவிட் லாக்டவுன் சமயத்துல இரண்டு வருடங்கள் வீட்டிலேயே இருந்தோம். நிறைய அற்புதமான நினைவுகள் இருந்தன. திடீரென அப்பா இறந்தது அதிர்ச்சியாக இருந்தது. எல்லா விஷயத்திலுமே நான் அப்பாவை அதிகம் மிஸ் செய்கிறேன். வீரமே வாகை சூடும் கதையில் நடிக்கும்படி அப்பாதான் கூறினார். ஹீரோயினாக நடித்துக்கொண்டிருக்கும்போது தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமா என்று முதலில் யோசித்தேன். பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்கும்போது நிறைய பேரிடம் ரீச்சாக முடியும் என்று கூறி அப்பாதான் எனக்கு நம்பிக்கை கொடுத்தார். அதன் பிறகுதான் நடிக்க சம்மதித்தேன்.

சாட்டை படம் பார்த்துவிட்டு அப்பாவும், அம்மாவும் ரொம்ப பாராட்டினார்கள். சின்ன வயதில் இருந்தே பேசியிருந்தாலும் முதன்முறையாக கதாநாயகிக்கு டப்பிங் பேசியதை பார்த்து அவர்களுக்கு ரொம்பவும் சந்தோஷமாகிவிட்டது. ஐ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஷங்கர் சார் என்னை ரஹ்மான் சாரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். பிண்ணனி இசைக்கோர்ப்பின் போது நான் டப்பிங் பண்ணியிருந்ததைக் கேட்டதாகவும், அது சிறப்பாக இருந்ததாகவும் கூறி பாராட்டினார். அவரிடம் இருந்து கிடைத்த அந்தப் பாராட்டு எனக்கு ரொம்பவும் ஸ்பெஷல்". இவ்வாறு ரவீனா ரவி தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT