ரெமோ, கவண், நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட பல படங்களில் நடித்துப் பிரபலமான நடிகை பிரியதர்ஷினியை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் தன்னுடைய திரையுலகப் பயணம் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்ட அவர், நடிகர் அஜித்துடனான நேர்கொண்ட பார்வை பட அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...
”அஜித் சாரின் நேர்கொண்ட பார்வை படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத்தின் பாஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அந்தப் படத்தில் அஜித் சாருடன் இணைந்து நடிப்பதற்கான வாய்ப்பு அமையவில்லை. அவர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அவர்கூட இணைந்து நடிக்க முடியாமல் போய்விட்டதே என்று ரொம்பவும் வருத்தப்பட்டேன். கடைசி நாள் ஷூட் ராமோஜி ராவ் செட்டில் நடந்தது. எனக்கும் அன்று காட்சி இருந்ததால் நானும் அங்கு சென்றிருந்தேன். கடைசிநாள் ஷூட் என்பதால் எல்லோருக்கும் நன்றி சொல்வதற்காக அஜித் சார் வந்திருந்தார். அவரை மீட் பண்ணுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை.
அவர் முன்னால் நாம் நிற்கும்போது ஏதோ ராஜா முன்னால் நிற்பதுபோல இருக்கும். ரொம்பவும் பணிவாக இருப்பார். அவர் பாடிலாங்குவேஜிலேயே அது தெரியும். என்னைவிட அவர் ரொம்பவும் உயரம். ஆனால், என்னிடம் பேசும்போது குனிந்து பேசினார். அவ்வளவு பெரிய நடிகர், சின்னச்சின்ன ரோலில் நடிக்கும் நடிகைக்கு இவ்வளவு மரியாதை கொடுத்து பேசுவதைப் பார்க்கும்போது ரொம்பவும் ஆச்சர்யமாக இருந்தது. அந்தச் சந்திப்பை என்னால் மறக்கமுடியாது”. இவ்வாறு நடிகை பிரியதர்ஷினி தெரிவித்தார்.