இயக்குநர் கணேஷ் விநாயக் இயக்கத்தில் நடிகர் தருண் குமார் 'தேன்' படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் கதாநாயகியாக அபர்ணதி நடித்திருந்தார். மலைவாழ் மக்களின் பிரச்சனைகளும் அவர்களின் வாழ்வியலையும் அழகாக இப்படம் திரையில் காட்டியது. கடந்த மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியான 'தேன்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் பல சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பாராட்டுகளை வாங்கிக் குவித்தது. குறிப்பாக கோவாவில் நடைபெற்ற இந்தியன் பனோரமா 2020 நிகழ்ச்சியில் இரண்டு தமிழ் படங்கள் மட்டுமே திரையிடப்பட்டது. அதில் ஒன்று 'தேன்' மற்றொன்று தனுஷ் நடிப்பில் வெளியான 'அசுரன்' படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 'தேன்' படத்தில் கதாநாயகனாக நடித்த தருண் குமார் நடிகர் ரஜினிகாந்திடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்," ரஜினி சார் நீங்கள் ஓய்வாக இருக்கும் போது என் படத்தை பார்க்க வேண்டும். நான் தேன் படத்தில் நடித்திருக்கிறேன். இப்படம் கடந்த மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியாகியது. 'தேன்' படத்தை உங்களிடம் காண்பிக்க அதிக முயற்சி செய்தோம். தேன் திரைப்படம் சோனி லவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. எனக் குறிப்பிட்டுள்ளார்.