5.80 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்ட இந்த பல்கலைக் கழகத்துக்குள் வருவதற்கு மூன்று வழிகள் உள்ளன. அதில் பிரதான வாயில் வழியாக நுழையும்போது வழியில் வெண்கலத்தால் செய்யப்பட்ட பிரமாண்ட மணி ஒன்று உள்ளது. இந்த மணி முக்கிய தகவல்களை மன்னருக்கு அறிவிக்க வைக்கப்பட்டுள்ளது. இந்த மணியை துறவிகள் மட்டுமே அடித்து தகவல்களை வெளிப்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ளது.
வீரத்தை அடையாளப்படுத்தும் டிராகன் அரசரின் சின்னமாகவும், அழகியலையும், போராடும், உயிர் பெறும் தன்மையை கொண்ட ஃபினிக்ஸ் பறவை ராணியின் சின்னமாகவும், ஆமை நீண்ட ஆண்டுக்காலம் உயிர் வாழக்கூடியது மற்றும் நீர்வழி ஞானம் உள்ளது என்பதாலும் மற்றும் யூனிகார்ன் உருவம் இந்த இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு மக்கள் இப்போதும் மரியாதை தருகின்றனர்.
இப்படியான வியட்நாம் கல்வி முறை இன்று எப்படி இருக்கிறது?
வியட்நாம் மக்கள் பண்டைய காலம் முதல் இப்போதுவரை கல்விக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். நாட்டில் 95 சதவித மக்கள் படித்தவர்கள். கல்வியை பள்ளி முதல் கல்லூரி வரை பல அடுக்குகளாக பிரித்து வைத்துள்ளனர். அதன்படி மழைலையர் கல்வி என்பது 3 வயதில் தொடங்குகிறது. 1 முதல் 5வது வரையிலான தொடக்ககல்வி 11 வயதில் முடிகிறது. நடுநிலைப்பள்ளி என்பது 6 முதல் 9வது வரையிலும், மேல்நிலைப்பள்ளி என்பது 10 முதல் 12 வது வரை வைக்கப்பட்டுள்ளன. அதன்பின் கல்லூரியில் இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி படிப்பு என வைத்துள்ளனர். மேல்நிலைப்பள்ளி வரை கல்வி அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்படுகிறது. அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள், அரசு தனியார் இணைந்து நடத்தும் பள்ளிகள், அமைப்புகள் நடத்தும் பள்ளிகள் என உள்ளன. கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள பள்ளிகள் கூட கட்டிடங்களாக அழகிய வடிவில் இருந்ததை பார்க்க முடிந்தது. தொடக்ககல்வி கட்டாயப்பட்டியலில் உள்ளது.
இன்று பண்டைய கல்வி முறை வரலாற்று சுவடாக உள்ள இந்த வளாகத்தை சுற்றி வந்தபோது செல்போனும் கையுமாக பலரும் சுற்றிக்கொண்டு இருந்தனர். உற்று நோக்கியபோது யூடியூபர்கள் என்பது தெரிந்தது. அழகிய இரண்டு யுவதிகளில் ஒருவர் வீடியோ எடுக்க மற்றொரு யுவதி பல்கலைக் கழகத்தின் வரலாற்றை விவரித்துக்கொண்டு இருந்தார்.
பயணம் தொடரும்...
நிறம் மாறும் செங்கொடி தேசம் – வியட்நாம் பயணத் தொடர் பகுதி – 5