இந்த நிலையில் ஷிகர் தவானுக்கு காயம் சரியாகாததால் அவர் தொடரிலிருந்து விலகுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவருக்கு பதில் பந்த் 15 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்பட உள்ளார். இந்நிலையில் கடைசி போட்டியில் சிறப்பாக ஆடிய விஜய் சங்கருக்கும் தற்போது காயம் ஏற்பட்டுள்ளது.
வரும் சனிக்கிழமை ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி. இதற்கான தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, பும்ரா பந்துவீச, அதை விஜய்சங்கர் எதிர்கொண்டார். அப்போது பும்ரா வீசிய யார்க்கர் பந்து விஜய் சங்கரின் கணுக்கால் பகுதியில் வேகமாக பாய்ந்தது. வலியால் துடித்த விஜய் உடனடியாக பேட்டிங் செய்வதை நிறுத்தினார்.
பின்னர் மருத்துவர்கள் குழு விஜய் சங்கருக்கு முதலுதவி அளித்தனர். வலி அதிகமாக இருந்ததால், விஜய் சங்கர் அதன்பின் பேட் செய்யவில்லை. இதுகுறித்து இந்திய நிர்வாகம் கூறுகையில் கவலைப்படும்படி விஜய் சங்கருக்கு பெரிய காயம் இல்லை என தெரிவித்துள்ளது.