ADVERTISEMENT

பயிற்சியாளர் பதவி: இன்னும் ஓகே சொல்லாத ட்ராவிட் - காத்திருக்கும் கங்குலி!

11:15 AM Oct 23, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம், இம்மாதம் தொடங்கவுள்ள இருபது ஓவர் உலகக்கோப்பையுடன் முடிவுக்கு வர இருக்கிறது. இதனையடுத்து பிசிசிஐ, அடுத்த தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணியைத் தொடங்கியுள்ளது.

இந்தநிலையில், ஐபிஎல் இறுதிப்போட்டியின்போது ராகுல் டிராவிட்டோடு பிசிசிஐ தலைவர் கங்குலியும், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவும் ஆலோசனை நடத்தியதாகவும், அப்போது ராகுல் டிராவிட் 2023 வரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

மேலும், தற்போது நடைபெற்றுவரும் 20 ஓவர் உலகக்கோப்பைக்குப் பின்னர், இந்தியாவில் நடைபெறவுள்ள நியூசிலாந்து தொடரில் அவர் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்பார் எனவும் தகவல் வெளியானது.

இந்தநிலையில், தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்க ராகுல் ட்ராவிட் இன்னும் சம்மதம் தெரிவிக்கவில்லை என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், ராகுல் ட்ராவிட் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள சம்மதித்துள்ளதாக வெளியான தகவல் தொடர்பான கேள்விக்குப் பதிலளிக்கும்போது இதனைக் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக கங்குலி கூறியதாவது, “ராகுல் ட்ராவிட் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பது இன்னும் உறுதியாகவில்லை. தலைமை பயிற்சியாளரை நியமிக்க உரிய நடைமுறை உள்ளது. அதுதொடர்பாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. ட்ராவிட் விரும்பினால் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

தற்போது அவர் என்.சி.ஏ.வின் இயக்குநராக இருக்கிறார். என்.சி.ஏ.வை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்து பேசுவதற்காக துபாயில் எங்களைச் சந்திக்க வந்தார். இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தை மேம்படுத்துவதில் என்.சி.ஏ.வுக்குப் பெரிய பங்குண்டு என்று நாங்கள் அனைவரும் நம்புகிறோம். என்.சி.ஏ. அடுத்த தலைமுறை இந்திய கிரிக்கெட் வீரர்களை உருவாக்குகிறது. எனவே அவர் அதைப் பற்றி விவாதிக்க விரும்பினார்.

சீனியர் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க விரும்புகிறாரா என்பது குறித்து நாங்கள் முன்பே அவருடன் ஆலோசனை நடத்தினோம். ஆனால் அவர் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. அவருடைய நிலைப்பாடு இப்போதும் அதேதான். அவர் சிறிது கால அவகாசம் கேட்டுள்ளார். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.”

இவ்வாறு கங்குலி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT