Skip to main content

இந்திய அணியில் சிறிய பிரச்சனை இருக்கிறது - சவுரவ் கங்குலி!

Published on 27/10/2021 | Edited on 27/10/2021

 

GANGULY

 

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இருபது ஓவர் உலகக்கோப்பை போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை (24.10.2021) நடைபெற்றது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி, அபார வெற்றிபெற்றது. உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்துவது இதுவே முதன்முறையாகும்.

 

இந்தச் சூழலில் பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வியடைந்ததையடுத்து, இந்திய அணி மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதேபோல் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை ஒருதரப்பினர் சமூகவலைதளங்களில் கடுமையாக வசைபாடினர்.

 

இந்தநிலையில், இந்திய அணியின் தோல்விக்கான காரணம் குறித்து பேசியுள்ள கங்குலி, இந்திய அணி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்திய அணி மற்றும் முகமது ஷமி மீதான விமர்சனங்கள் குறித்து அவர் கூறும்போது, "இது ஒரு மிகையான எதிர்வினை. பாகிஸ்தானோடு தோற்றதால் நிறைய விஷயங்கள் எழுப்பப்படுகின்றன. எனக்கு இது பெரிய விஷயமில்லை. விளையாட்டில் இது நடக்கும். நீங்கள் தோல்வியடைவீர்கள்; எல்லோரும் தோல்வியடைவார்கள். அவர்களால் (இந்திய அணி) திரும்பி வந்து நாக் அவுட்களுக்குச் செல்ல முடியும் என்று நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.

 

தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டம் முக்கியமானது என்றும், அதில் இந்தியா வெல்லும் என நம்புவதாகவும் தெரிவித்த கங்குலி, பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைய போதுமான ரன்களை சேர்க்காததே காரணம் என கூறியுள்ளார்.

 

மேலும், ஆறாவது பந்து வீச்சாளராக யாரும் செயல்படாதது தற்போதைய இந்திய அணிக்கு கொஞ்சம் பிரச்சனை எனவும் கங்குலி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், "எங்கள் அணியில் நான் பந்து வீசினேன். சேவாக் பந்து வீசினார். அதுபோல் பந்து வீச யாரும் இல்லாததுதான் தற்போதைய இந்திய அணியில் இருக்கும் சிறிய பிரச்சனை. அவர்கள் அதை மாற்றி சிறப்பாக விளையாடுவார்கள் என நம்புகிறேன். அவர்கள் (இந்தியா) நல்ல அணி. கடந்த இரண்டு வருடங்களாக அவர்கள் நன்றாக விளையாடிவருகிறார்கள்" என தெரிவித்துள்ளார்.

 

 

Next Story

ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்த படத்திற்கு சௌரவ் கங்குலி பாராட்டு

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
sourav ganguly praised ajay devgn starring ar rahman musical maidaan movie

அமித் ரவிந்தர்நாத் ஷர்மா இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜய் தேவ்கன், பிரியாமணி நடித்துள்ள படம் மைதான். இப்படம் இந்திய கால்பந்து ஆட்டம் குறித்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி, 1952 மற்றும் 1962க்கு இடையில் இந்திய கால்பந்தில் பங்காற்றிய சையத் அப்துல் ரஹீமின் கதையை விவரிக்கும் வகையில் உருவாகியுள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவான இப்படம் கடந்த 10ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. 

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்திற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, பாராட்டு தெரிவித்துள்ளார். எக்ஸ் வலைதளத்தில் அவரது பக்கத்தில் பாராட்டி பதிவிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் புகழ்பெற்ற கால்பந்து பயிற்சியாளர் சையது அப்துல் ரஹீம் மற்றும் இந்திய கால்பந்தின் பொற்காலத்தின் வசீகரமான சித்தரிப்பான மைதான் படத்தை தவறவிடாதீர்கள். கட்டாயம் பார்க்க வேண்டிய இந்திய ஸ்போர்ட்ஸ் திரைப்படம். இந்திய கால்பந்து நட்சத்திரங்களின் வாழ்க்கையைப் பெரிய திரையில் பார்த்து கண்டுகளியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 
 

Next Story

விஜயகாந்த் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் இரங்கல்

Published on 29/12/2023 | Edited on 29/12/2023
Indian cricketer Washington Sundar condoles death of Vijayakanth

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்பு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும், தேமுதிக நிர்வாகிகளும், திரையுலகப் பிரபலங்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். மக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் தேமுதிக அலுவலகம் முன்பு திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து கூட்டம் அதிகமாக வரவே, விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணிக்கு மேல் தீவுத்திடலில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. அங்கு பல்லாயிரக்கணக்கானோர் குவிந்து விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதுபோக, தொடர்ந்து வெளியூர்களில் இருந்து மக்கள் தீவுத் திடலை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் விஜயகாந்த்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.