நடப்பு ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளும் கடுமையாகப் போராடி வருகின்றன. லீக் போட்டிகள் ஏறத்தாழ முடிவுக்கு வரும் நிலையில் ப்ளே ஆஃப் போட்டிகளுக்கு தகுதி பெற முயன்று வருகிறது. குஜராத் - சென்னை அணிகளுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு ஏறத்தாழ உறுதி செய்யப்பட்ட நிலையில் மூன்று மற்றும் நான்காம் இடங்களுக்கு மும்பை, ராஜஸ்தான், லக்னோ, பெங்களூர் அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் நாளை அஹமதாபாத்தில் நடைபெறும் 62 ஆவது லீக் போட்டியில் குஜராத் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் குஜராத் அணி புதிய ஜெர்ஸியில் களமிறங்குகிறது. வழக்கமாக ப்ளூ ஜெர்ஸியில் களமிறங்கும் குஜராத் அணி நாளை பிங்க் நிற ஜெர்ஸியில் களமிறங்க உள்ளது. புற்றுநோய்க்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
முன்னதாக பெங்களூர் அணி மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் உருவாக்கப்பட்ட பச்சை நிற ஜெர்ஸியை அணிந்து விளையாடியது குறிப்பிடத்தக்கது. அந்த அணி கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் ‘கோ க்ரீன்’ என்று பெயரிட்டு சுற்றுச்சூழல் பிரச்சனைகளை கருத்தில் கொண்டு அதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பச்சை ஜெர்ஸியை அணியும் என்பது குறிப்பிடத்தக்கது.