இந்த ஆட்டத்தில் தோனி தனது பேட்டிங்கை தொடங்கிய போது மெதுவாகவே ரன்கள் சேர்த்தார். இதனால் சமூகவலைதளங்களில் அவரை கலாய்த்து மீம்கள் குவிந்தன. ஆனால் ஆட்டம் முடியும் போது சிறப்பான ஸ்ட்ரைக் ரேட்டுடன் ஆட்டத்தை முடித்தார். இந்நிலையில் தோனியின் ஆட்டம் குறித்து கோலியிடம் கேள்வியெழுப்பப்பட்டது.
அப்போது பேசிய அவர், "ஒரு ஆட்டத்தில் அணிக்கு என்ன தேவை என்பது தோனிக்கு தெரியும். அதன்படி தான் மிடில் ஓவர்களில் அவர் ஆடி வருகிறார். சில நேரங்களில் ஆடாமல் கூட போகலாம். அது எல்லோருக்கும் நடக்கிற ஒன்று தான். ஆனால் அவர் ஆடவில்லை என்றால் மட்டும் எல்லோரும் பேச ஆரம்பித்து விடுகிறார்கள். இந்தப் போட்டியில் அவர் சரியாகவே செயல்பட்டார். கடைசி நேரத்தில் எப்படி ஆட வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். அவரது அனுபவம், எப்போதும் அணிக்கு சரியாகவே உதவியிருக்கிறது.
சிறப்பாக கிரிக்கெட் ஆடும் வீரர்கள் பலர் அணியில் இருந்தாலும், தோனி மட்டும்தான் ஒரு பிட்சை கணித்து அதில் எவ்வளவு ஸ்கோர் சிறந்தது என்கிற தகவலை தருபவராக இருக்கிறார். இந்த பிட்ச்-சில் 265 நல்ல ஸ்கோர் என்று அவர் சொன்னால், நாங்கள் 300 ரன்னுக்கு முயற்சிக்கவும் மாட்டோம். 230-க்குள் முடிக்கவும் மாட்டோம். அவர் கூறியதை பின்பற்றுவோம். அவர் எங்களுக்கு ஒரு லெஜண்ட் போன்றவர். எப்போதும் அவருக்கு ஆதரவாகவே இருக்கிறோம். இந்தியாவுக்காக பல போட்டிகளில் அவர் வெற்றி தேடி தந்தவர்" என கூறினார். கோலியின் இந்த பதிலை தோனியின் ரசிகர்கள் வெகுவாக பாராட்டி, மகிழ்ச்சியோடு இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். மேலும் இது தோனி ஹேட்டர்ஸுக்காகவே கோலி கூறியது போல உள்ளது என்றும் கருத்துக்களை பதிவிட்ட வருகின்றனர்.