அணியில் இருந்து நீக்கப்பட்ட வீரர்களுக்கு கொஞ்சம் இடம்கொடுங்கள் என சச்சின் தெண்டுல்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க தொடரில் பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு ஓராண்டும், பான்கிராஃப்டுக்கு ஒன்பது மாதங்களும் தடைவிதித்து உத்தரவிட்டது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. இந்த நடவடிக்கையை அடுத்து பொதுவெளியில் பேசிய இந்த வீரர்கள் தங்கள் தவறுக்கு மன்னிப்பு கோருவதாகக் கூறியிருந்தனர்.
ஜெண்டில்மேன் கேம் என்று சொல்லப்படும் இந்த விளையாட்டில், இப்படியொரு குற்றம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், அந்த வீரர்களுக்கு வாழ்நாள் தடைவிதிக்க வேண்டும் என்றும் பலர் கண்டனக்குரல்கள் எழுப்பிவரும் சூழலில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர், ‘அவர்கள் தாங்கள் செய்த தவறுக்கு வருத்தம் தெரிவித்தது மட்டுமல்லாமல், மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அவர்கள் இனிவரும் காலத்தில் இந்தத் தவறு தந்த விளைவுகளோடு பயணிக்கவேண்டி வரும். அவர்களைத் தேற்றி உடனிருந்து பார்த்துக்கொள்ள இருக்கும் குடும்பத்தினருக்கு நாம் நன்றி சொல்லிக்கொள்வோம். இனி அவர்களைத் திட்டாமல், ஒரு அடி பின்னே வந்து அவர்களுக்கான இடத்தைக் கொடுப்போம்’ எனத் தெரிவித்துள்ளார்.