Skip to main content

7 ஆண்டுகளுக்கு முன் இதே தினம், 'சச்சின் சச்சின்' என்ற சத்தத்தால் மும்பையே அதிர்ந்தது!!

Published on 16/11/2018 | Edited on 16/11/2020

வான்கடே மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம், வெற்றிக்கு அருகில் இருந்த இந்திய அணி அந்த ஆட்டத்தை விரைவாக வென்றுவிடக்கூடாது என்பதே பெரும்பாலான  இந்திய ரசிகர்களின் ஒருமித்த வேண்டுதலாக இருந்தது. காரணம், களத்தில் இருந்த சச்சினின் கடைசி ஆட்டம் அது. சச்சின் அவுட் ஆனாலே டீவியை ஆஃப் செய்துவிட்டு செல்லும் ரசிகர்கள்,  இனி அவர் விளையாடவே மாட்டார் என்றபோது அப்படித்தானே வேண்டிக்கொள்வார்கள்.

 

sac

 

இப்படிப்பட்ட தீவிர ரசிகர்களைக் கொண்ட சச்சின் தன் வாழ்வில் பல்வேறு ஏற்ற இறக்கங்களையும், சர்ச்சைகளையும் கடந்தே வந்துள்ளார். தனது 16 வது வயதிலேயேசர்வதேச போட்டிகளில் களமிறங்கிய சச்சின் பெரிய ஜாம்பவான்களுக்கு மத்தியில் ஒரு சிறுவனாக தன் ஆட்டத்தை தொடங்கினார். வாசிம் அக்ரம், வகார் யூனிஸ், பிரெட் லீ, ஷேன் வார்னே என பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் நிறைந்த காலம் அது. அப்படிப்பட்ட காலத்தில் பேட்டிங்கில் பல்வேறு சாதனைகள் புரிந்தவர் சச்சின். 1994 ல் சச்சின் முதன்முதலில் பேட்டிங்கிற்கான ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை பிடித்தார்.

 

இருபத்தியோராம் நூற்றாண்டின் முதல் ஆண்டு சச்சினுக்கு சிறப்பான ஆண்டாக அமைந்தது. ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்த சச்சின் தொடர்ந்து ஒரு ஆண்டுக்கு மேல் அந்த இடத்தில் நீடித்தார். ஆனால் 2001 ல் மிக சிறப்பாக விளையாடிய சச்சின், 2002 ல் ஃபார்ம் அவுட்டாகி சற்று சொதப்பினார். அவர் மீது விமர்சனம் எழ ஆரம்பித்த நேரம், சரியாக 2003 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடி விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருதை வென்றாலும், இந்தியா அந்த உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுடன் போராடி தோற்றது.

 

sac

 

சிறு வயதில் கபில்தேவ் உலகக்கோப்பை வென்றதை பார்த்து, அது போல் நாமும் வெல்ல வேண்டும் என்ற கனவுடன் கிரிக்கெட்டுக்கு வந்த சச்சினுக்கு அந்த கனவு நிறைவேற 21 ஆண்டுகள் ஆனது. 2011 ல் அந்த வெற்றிக்கு பிறகு இந்திய அணியே அவரை தொளில் சுமந்து மைதானத்தை சுற்றி அவருக்கு மரியாதையளித்தது. அதிக ரன்கள், சதங்கள், அதிக நாட்கள் விளையாடியவர் என எண்ணிலடங்கா சாதனைகளை கொண்ட இந்த சாதனை மன்னன், சர்ச்சைகளுக்கும் விதிவிலக்கல்ல. பயிற்சியாளர் கிரெக் சேப்பல் மோதல், சைமண்ட்ஸ் மற்றும் ஹர்பஜன் சிங் சண்டையில் கருத்து கூறியது, ஃபெராரி காருக்கு வரி செலுத்தாதது, பந்தை சேதப்படுத்தியது, பெட்டிங் விவகாரம் என பல்வேறு சர்ச்சைகளையும் கடந்து வந்துள்ளார்.          

 

இப்படிபட்ட சச்சின் 2013 ல் இதே நாளில்தான் தழுதழுத்த குரலுடன் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ரசிகர்கள் முன்னிலையில் அறிவித்தார். சர்ச்சைகள் எவ்வளவு வந்தாலும் அதையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவு சாதனைகளும் அவரை பின்பற்றிக்கொண்டேதான் இருந்தது. அதனால்தான் இன்றளவும் கிரிக்கெட்டின் கடவுளாகவே உள்ளார் சச்சின்.

 

 

Next Story

கிரிக்கெட் கதைக்களத்தை கையிலெடுத்த ஜேசன் சஞ்சய்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
jason sanjay movie update

விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இவரது மகனான ஜேசன் சஞ்சய், கனடா பல்கலைக்கழகத்தில் சினிமா துறை சம்பந்தமாகப் படித்து வந்தார். இவர் குறும்படம் இயக்கும் புகைப்படங்கள் முன்னதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இயக்கம் மீது அவருக்கு ஆர்வம் இருப்பதாகச் சொல்லப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.  இப்படத்தை லைகா தயாரிக்கிறது. இப்படத்தில் கவின், துல்கர் சல்மான் உள்ளிட்ட சில நடிகர்களின் பெயர் அடிப்பட்டது. ஆனால் அறிவிப்புக்கு பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. 

பின்பு ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வந்ததாக சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி கிரிக்கெட் கதைக்களத்தை கொண்டு இப்படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. சமீப காலமாக கிரிக்கெட்டை மையப்படுத்தி லால் சலாம், ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்கள் வெளியாகின.

மேலும் டெஸ்ட் என்ற தலைப்பில் சசிகாந்த் இயக்கத்தில் ஒரு படம் உருவாகி வருகிறது.

Next Story

WPL : சாம்பியன் பட்டத்தை வென்ற பெங்களூரு அணி!

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
WPL : Bengaluru team won the title

இந்த ஆண்டுக்கான பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி (W.P.L.) கடந்த பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி (23.02.2024) தொடங்கியது. இது பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 2வது சீசன் ஆகும். இதற்கான இறுதிப் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (17.03.2024 நடைபெற்றது.

இந்த இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் மெக் லானிங் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணி 18.3 ஓவர்களில் 113 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பெங்களுரூ அணி சார்பில் ஷ்ரேயங்கா பாட்டில் 4 விக்கெட்களையும், மொலினஷ் 3 விக்கெட்களையும் எடுத்து அசத்தினர்.

அதன் பின்னர் 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி  களமிறங்கியது. இதனையடுத்து சிறப்பாக ஆடிய பெங்களூரு அணி 19.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இறுதிப் போட்டியில் டெல்லி அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தியது. மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 2வது சீசனில் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது.

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றதையடுத்து பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்ம்ரிதி மந்தனாவுக்கு, கிரிக்கெட் வீரர் விராட் கோலி வீடியோ காலில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதேபோன்று கோப்பை வென்ற பெங்களூரு மகளிர் அணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.