இறைவன் நம்முள்ளேயே இருக்கிறான் என்பதுபோல், தீர்வு நம்மிடமே இருக்கிறது. ஆமாம்; உணவே மருந்து; மருந்தே உணவு.உணவு முறையை ஒழுங்குக்குள் கொண்டு வந்துவிட்டால், உடல் ஆரோக்கியம் தானே வந்துவிடும். அதற்கு முதலில் சமையலுக்குச் சலாம் சொல்ல வேண்டும்.இயற்கையான காய், கனி, கீரை வகைகளை உணவில் முக்கியமாக்கிக் கொள்ள வேண்டும். பூமிக்குக் கீழே உற்பத்தி ஆகிற கிழங்கு வகைகளுக்கு டாட்டா சொல்ல வேண்டும். கார்போ ஹைட்ரேட் நிறைந்த அரிசிப் பதார்த்தங்களுக்கு சல்யூட் அடித்து ஓரங்கட்டிவிட வேண்டும். ப்ரைட் ஐயிட்டங்களை அறவே ஒதுக்கிவிட்டால் உத்தமம்.இப்படித்தள்ள வேண்டிய பட்டியலைத் தயாரித்து விட்டால் உடம்பின் உபாதைகள் பாதி குறைந்துவிடும். வயிறு குப்பைக் குழியாவது தடுக்கப்பட்டுவிடும். அதற்கப்புறம் எவைஎவை தேவை என்று பார்த்து, அவற்றை உணவில் சேர்த்துக்கொண்டால், உடம்பு கோவிலாகவே மாறிவிடும்.இந்த மாற்றத்துக்கு முதல் தேவை, "மாற்றம் எனது மானிடத் தத்துவம்; மாறாதிருக்க நான் வனவிலங்கல்ல!' என்று கண்ணதாசன் கவிதை வரிகளை மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். என் ஆரோக்கியத்துக்காக என் பழக்கத்தை மாற்றுவேன் என உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்!
அடுத்து, இயற்கை மருத்துவம் என்றால் என்ன?
இது ஒரு மருந்தில்லா மருத்துவம். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்சபூத தத்துவத்தின் அடிப்படையைக் கொண்டதும் கீரைகள், இலைகள், காய்கறிகள், பழவகைகள், முளையிட்ட தானிய வகைகள் ஆகியவற்றை மருந்தாகக் கொண்டதுமே.... இயற்கை மருத்தும்! அதாவது, "உணவே மருந்து, மருந்தே உணவு' இதுவே இயற்கை மருத்துவத் தத்துவம்.இயற்கை மருத்துவத்தில் குணப்படுத்த முடியாத நோய்களே இல்லை எனலாம். இம்மருத்துவமுறை செலவில்லாதது. சிக்கனமானது. பக்க விளைவுகள் அற்றது. முற்றிலும் பாதுகாப்பானது. சமைத்த உணவில் 30 சதவிகிதம்தான் சத்தாக உடம்பில் ஒட்டுகிறது. ஆனால் இயற்கை உணவில் 90 சதவிகிதம் சத்தாகச் சேர்ந்துவிடுகிறது. புற்றுநோய் முதலாக, ஆஸ்துமா, சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், தொழுநோய், சிறுநீரகக் கோளாறுகள், காமாலை, சயரோகம், குடற்புண் இன்னும் எண்ணற்ற வியாதிகளைக் குணப்படுத்தும் அற்புத மருத்துவமே இயற்கை மருத்துவம். "இயற்கை உணவுகளே இயற்கை மருத்துவம்.'நன்கு பசிக்கிறது. சாப்பிடுகிறோம். மூன்று வேளையும் சாப்பிடுகிறோம். நமது பொருளாதார அமைப்பிற்கேற்றவாறு, உணவில் பல வகைகளைச் சமைத்து ருசியாய்ச் சாப்பிடுகிறோம்.நாம் உண்பது, உடலை வளர்க்கவும், உணர்ச்சிகளைத் தீர்த்துக்கொள்ளவும், இழந்த சக்தியை மீட்டுக் கொள்ளவும்தான். உடல் வளர்கிறது. வயது முதிர்கிறது. மூப்பு அடைகிறது. மரணம் வந்துவிடுகிறது.இந்த வளர்ச்சி, முதிர்ச்சி, மூப்பு, மரணம் இவற்றிற்கு நம் உணவால் என்ன பயன் என்று கண்டால் ஒன்றுமில்லை.பருவ வளர்ச்சியைக் கெடுத்து, அறிவு வளர்ச்சியைக் குறைத்து, மனதை அலைபாயவிட்டு, வாழ்வை நரகமாக்கும் வித்தையை நமது சுவையான உணவுகள் செய்துவிடுகின்றன.