புண்ணுடையர் கல்லா தவர்.
படித்தவர்கள் இரண்டு கண்களை உடையவராகவும், படிக்காதவர் முகத்தில் இரண்டு கண்கள் இருந்தாலும், அது புண்களுக்குச் சமமாகும் என்பது வள்ளுவரின் வாக்கு. ஒருவர் கற்கும் கல்வியானது அவரது ஏழு தலைமுறையினருக்கும் சேர்த்து வைக்கும் செல்வமாகும். எல்லாச் செல்வங்களையும் ஒருவர் இழந்தாலும், அவர் கற்ற கல்வியினால் எந்த ஊருக்கு, நாட்டிற்குச் சென்றாலும் பிழைத்துக்கொள்ள முடியும். நாம் கற்றதைப் பிறருக்கு சொல்லிக் கொடுக்கக்கொடுக்க நமக்கும் அறிவுத்திறன் உயரும். மற்றவர்களும் பயனடைவார்கள். அத னால்தான் கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்புடையதாகிறது. நாம் கற்ற கல்வியை பிறரால் களவாட முடியாது. படிப்பதால் உலக விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது. நல்லது- கெட்டது எது என ஆராய்ந்து செயல்பட முடிகிறது. யாரிடம் எப்படிப் பழக- பேசவேண்டும் என்ற பண்பாடு வளர்கிறது. பிறருக்கு உதவிசெய்யும் மனப்பான்மை உண்டாகிறது.
நவகிரகங்களில் சந்திரன் மனோகாரகனாவார். இவர், ஒருவரின் மனநிலையும், மனவலிமையும் எந்த நிலையில் இருக்குமென அறிவிக்கும் கிரகமாவார். புதன் கல்வி காரகனாவார். இவர் ஞாபகசக்தி, புத்திசாலிலித்தனம், கல்விகற்கும் திறன் பற்றிக் குறிப்பிடும் கிரகமாவார். குரு, நல்ல பேச்சாற்றல், அறிவாற்றல், புத்திசாலிலித்தனம், படிப்பறிவு போன்றவற்றுக் காரகனாவார். ஒருவருக்குக் கல்விச்செல்வம் சிறப்பாக அமைய ஜனன ஜாதகத்தில் 4-ஆம் பாவமும், சந்திரன், குரு, புதன் போன்ற கிரகங்களும் பலமாக அமைந்திருப்பது நல்லது. 4-ஆம் பாவம் பலம்பெறுவது மட்டுமின்றி அடிப்படைக் கல்வியைக் குறிக்கும் 2-ஆம் பாவமும் பலம்பெறுவது நல்லது. கற்ற கல்வியைப் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற 5-ஆம் பாவமும் பலம்பெறுதல் அவசியம். ஆகவே 2, 4, 5-ஆம் பாவங்கள் பலம்பெற்று அமைந்துவிட்டால், சரஸ்வதி தேவி கதவைத்தட்டி கல்விச் செல்வத்தை வாரி வழங்குவாள். அதன்மூலம் வாழ்வில் வளம்பெறமுடியும்.
சூரியன், செவ்வாய், புதன் ஆகியோர் 4-ஆம் வீட்டில் இணைந்திருந்தால் பொறியியல் துறையில் பொறியாளராகக்கூடிய யோகம் உண்டாகும். சூரியன், செவ்வாய் பலமாக அமையப் பெற்றவர்கள் மருத்துவத் துறையில் சாதனை செய்வார்கள். சூரியன், செவ்வாயுடன் சந்திரன் அல்லது கேது சேர்க்கைப் பெற்றால் கண்டிப்பாக மருத்துவத்துறையில் சாதனை செய்யும் வாய்ப்பு உண்டாகும். செவ்வாய், புதன் இணைந்திருந்தால் கட்டடப் பொறியாளராகும் யோகம்; செவ்வாய், சந்திரன் இணைந்திருந்தால் கப்பல்துறை தொடர்புடைய கல்வி யோகம் உண்டாகும். செவ்வாய், புதன், குரு சேர்க்கைப் பெற்றால் அறிவியல் சார்ந்த கல்வி சாதகமாக அமையும் பட்சத்தில் விஞ்ஞானியாகும் யோகம் ஏற்படும். புதன், குரு போன்ற சுபர் சேர்க்கைப் பெற்றால் பேச்சால், வாக்கால் மேன்மை கிடைக்கும். ஆசிரியர் பணி, பள்ளி, கல்லூரிகளில் பணிபுரியக்கூடிய யோகம், வழக்கறிஞராகும் வாய்ப்பு, மற்றவர்களுக்கு ஆலோசகராக விளங்கக்கூடிய யோகம் உண்டாகும். குரு அதிபலம் பெற்றால் வங்கிப் பணி சார்ந்த கல்வி யோகம் உண்டாகும்.
குரு, புதனுடன் சந்திரன் சேர்க்கைப் பெறுகின்றபோது ஒருவர் எழுத்துத்துறை, பத்திரிகைத்துறையில் சாதனை செய்யும் யோகம், நல்ல கற்பனை வளம், கதை, கவிதைகள் எழுதக்கூடிய ஆற்றல் உண்டாகும். 4-ஆம் வீட்டில் சந்திரன் பலம்பெறுகின்றபோது கேட்டரிங் கல்வி, கடல் சார்ந்த கல்வி உண்டாகும். சந்திரனும், சுக்கிரனும் இணைந்திருந்தால் கலை, இசை, சங்கீதம், பாட்டு தொடர்புடையவற்றில் ஈடுபாடு உண்டாகும். சுக்கிரன் பலம்பெற்று புதன் சேர்க்கைப் பெறுகின்றபோது கலைத்தொடர்புடைய தொழில்நுட்பக் கல்வி யோகம் உண்டாகும். ஒருவர் எவ்வளவுதான் கல்விரீதியாக உயர்வுகளைப் பெற்றாலும், பல பட்டங்களை வாங்கியிருந்தாலும் கற்ற கல்விக்கேற்ற பணியையோ, தொழிலையோ செய்ய முடியாத நிலை உண்டாகி விடுகிறது. பிற தொழிலில் ஈடுபடக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது. 4-ஆம் வீட்டை சனி, செவ்வாய் போன்ற கிரகங்கள் பார்த்தாலும், 4-ஆம் அதிபதி அல்லது புதன் வக்ரம் பெற்றாலும் இந்த நிலை உண்டாகிறது.