முன்பு முனிவர் படையலிட்டிருந்ததைப் பார்த்து, "இது என்ன அலங்கோலம்' என்று கருதி அவற்றை அப்புறப்படுத்தினான். மலையிலிருந்து வேகமாக இறங்கிஓடி, பொன்முகலி நதிக்கரையில் தான் வேட்டையாடிப் போட்டிருந்த பன்றியின் சுவையான பகுதிகளைச் சுட்டு வேகவைத்தான். சுவையுள்ளதா என்று மென்று பார்த்து, அதை எடுத்து இலைகளில் வைத்துக் கொண்டான். இறைவனைக் கழுவி சுத்தம் செய்ய பாத்திரங்கள் இல்லாததால், தன் வாய்நிறைய நீரை நிரப்பிக்கொண்டான். இறைவனை அலங்கரிக்க காட்டுப் பூக்களைப் பறித்துத் தன் தலையில் செருகிக்கொண்டு, மீண்டும் வேகமாக மலை ஏறினான். தன் வாயில் நிரப்பிய நீரால் இறைவனைக் கழுவினான். தலையில் கொண்டுவந்த மலர்களை எடுத்து அலங்கரித்தான். தான் ருசிபார்த்த பன்றி இறைச்சித்துண்டுகளை படையலிட்டான். இறைவனைத் தொழுதான்; கட்டிக்கொண்டு அழுதான். நடந்தவற்றையெல்லாம் வேடிக்கைப் பார்த்த அவனது நண்பர்கள், "என்னாச்சு நம் தலைவனுக்கு' என வியந்தனர்.பூஜை முடிந்ததும் திண்ணப்பனிடம், ""இனி ஊருக்குப் போகலாம். பொழுதும் சாய்ந்துவிட்டது. அப்பா, அம்மா, மனைவி, மக்கள் எல்லாரும் நமக்காகக் காத்திருப்பார்கள்'' என்று திண்ணப்பனை அழைத்தனர். "நான் இனி இங்கிருந்து வரமாட்டேன். இறைவன் யார் துணையும் இல்லாமல் உள்ளார். இந்த காட்டுப் பகுதியில் விலங்குகளால் இறைவனுக்கு ஆபத்து வரும். அவரைத் தனியாக விட்டுவிட்டு வரமாட்டேன்'' என்று திண்ணப்பன் உறுதியாகச் சொல்லிவிட்டான். வேறுவழியின்றி அவனது நண்பர்கள் ஊருக்குச் சென்று அவனது பெற்றோரிடம் விவரத்தைச் சொல்ல, மறுநாளே வந்து மகனை அழைத்தனர். பெற்றோர் அழைத்தும் போகமறுத்த திண்ணப்பன், தினசரி காட்டு விலங்குகளை வேட்டையாடி சுட்டு அதனை இறைவனுக்குப் படையலிட்டு வழிபட்டு வந்தான். காட்டுக் கொடிகளால் பந்தல்போட்டு இறைவனைப் பாதுகாத்து வந்தான்.
இப்படி தினசரி திண்ணப்பன் இறைவனின் பூஜைக்கு வேட்டையாடப் போகும் நேரம் முனிவர் வந்து பார்த்து, "இது என்ன அபச்சாரம். மாமிசத்தை இறைவனுக்குப் படையலிடுவதா? யார் இதுபோன்று செய்தது' என்று அதை அப்புறப்படுத்திவிட்டு தமது பொங்கலை வைத்து வழிபடுவார். அவர் சென்றபிறகு தனது பூஜைப்பொருட்களோடு வரும் திண்ணப்பன், "இது என்ன படையல்' என்று அப்புறப்படுத்தி "யார் இப்படிச் செய்தது' என்று கோபப்படுவான்.இப்படி தினசரி வேடன் திண்ணப்பனும் முனிவரும் அவரவர் வழிமுறைப்படி மாறிமாறிப் பூஜைசெய்து வந்தனர். காற்று, மழை, இடி, மின்னல் என கொட்டிய போதும் திண்ணப்பன் இரவு பகல் பாராமல் இறைவனைப் பாதுகாத்துப் பூஜை செய்துவந்தான். நாட்கள் கடந்தன. ஒரு நாள் இரவு முனிவர் உறங்கும்போது இறைவன் அவர் கனவில் தோன்றி, "வேடன் செய்யும் கள்ளங்கபடமற்ற பூஜையில் உண்மையன்பு உள்ளதால் அதை ஏற்றுக்கொள்கிறேன். அவனது அளப்பரிய அன்பு எத்தகையது என்பதை நாளை காலை மறைந்திருந்து பாருங்கள்' என்று சொல்லி மறைந்தார்.
பக்தனின் தன்னலமில்லாத அன்பையும் பக்தியையும் கண்ட இறைவன், "கண்ணப்பா, நிறுத்து' என்றார். அதோடு தமது திருக்கரங்களால கண்ணைத் தோண்டப்போன கண்ணப்பனின் கைகளையும் பிடித்துத் தடுத்தார். அங்கே கண்ணப்பனுக்கு தமது வெள்ளெருது வாகனத்தில் காட்சி கொடுத்து அருள் வழங்கினார் இறைவன். இந்த காட்சிகளைக் கண்ட முனிவர் இறைவனையும் திண்ணப்பனின் பக்தியையும் கண்டு மெய்சிலிர்த்துப் போனார். வானவர்கள் பூமாரி பொழிந்தனர். அப்போதுமுதல் திண்ணப்பன் கண்ணப்பர் என அழைக்கப்பட்டான்.
வேடர்குலத் தலைவர் கண்ணப்பர் வழிபட்ட ஈசனே திருக்காளத்திமலை மீதுள்ள திருக்காளத்தீஸ்வரர். இவருக்கு மேற்கே மகாவிஷ்ணு திருப்பதி மலைமீது வேங்கடேசப்பெருமாளாக அருளாசி வழங்கிவருகிறார். பக்தர்கள் இரண்டு கோவில்களுக்கும் ஒரேநாளில் சென்று தரிசித்து வருகிறார்கள். அந்த தெய்வங்களின் பெயர்களோடு ஏழு செம்பொன் என்னும் ஊரில், ஊருக்கு மேற்கில் தென்திருவேங்கடப் பெருமாள் என்ற பெயரோடு மகாவிஷ்ணு கோவில் கொண்டுள்ளார். ஊருக்கு கீழ்ப்பகுதியில் தென்திருக்காளத்தீஸ்வரர் கோவில் கொண்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தின் மையப்பகுதியில் உள்ளது ஏழு செம்பொன் கிராமம். சுமார் 5000 மக்கள் வாழும் இந்த ஊர் கற்றோர்கள் அதிகம் வாழும் ஊர்களில் ஒன்று. இந்த ஊருக்கு இந்தப் பெயர் வந்த காரணத்தை ஊர் முக்கியஸ்தர்களான பெரியவர் சக்கரவர்த்தி கலியபெருமாள், சுப்பிரமணியன், பாண்டுரங்கன், பன்னீர்செல்வம், துளசிதாஸ் அய்யப்பன் ஆகியோர் கூறினார்கள்.
""எங்கள் ஊரைத் தலைநகராகக்கொண்டு ஏழிசை மோகன் என்ற சிற்றரசன் சிறப்பாக ஆட்சிசெய்துள்ளார். அவர் காலத்திற்கு முன்பே இங்கு பெரிய சிவாலயம், பெருமாள் ஆலயங்கள் இருந்துள்ளன. மோகன் மிகுந்த இசைப்புலமை பெற்றவர். ஏழுசுரங்களையும் இசைக்கக்கூடியவர். மற்றவர்களையும் பாடச்சொல்லி ரசித்துக்கேட்பவர். ஏழிசை மோகன் என்னும் அவரது பெயரே ஊருக்கு அமைந்து, காலப்போக்கில் அது மருவி ஏழு செம்பொன் என்று ஆனதாக எங்கள் முன்னோர் சொல்லியுள்ளனர். இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. இங்குள்ள விஷ்ணு, சிவாலயங்கள் முஸ்லிம்கள் படையெடுப்பின்போது சிதிலமாக்கப்பட்டுள்ளன. அதன்பிறகு அவ்வளவு பெரிய கோவிலை எடுத்துக்கட்ட முடியவில்லை. அந்த கோவில்களுக்கு அடியில் ஏழு செம்பொன்னாலான குடங்களில் புதையல் இருப்பதாக அந்தக்காலம் முதல் சொல்லிவருகிறார்கள். அதனால் இந்த ஊருக்கு ஏழு செம்பொன் என்று பெயர் உள்ளதாக செவிவழித் தகவல்களும் உள்ளன. அப்படிப்பட்ட பாரம்பரியப் பெருமைமிக்க பெருமாள் ஆலயத்தைப் புதுப்பித்துக்கட்டி கும்பாபிஷேகம் நடத்தி முறையான வழிபாடுகள் செய்யப்படுகின்றன. அதேபோல சிவாலயத்தையும் புதுப்பித்து எழுப்ப ஊர் மக்கள் ஒன்றுசேர்ந்து முயற்சி செய்து வருகிறோம். பல தடைகள் ஏற்பட்டுவருகின்றன. அந்த எம்பெருமானே எங்களுக்கு வழிகாட்டி, ஆலயம் எழுப்ப உதவிட வேண்டும்'' என்கிறார்கள் மேற்கண்ட ஊர் முக்கியஸ்தர்கள்.
ஏழு செம்பொன் இந்திய கிராமங்களுக்கே ஒரு முன்னுதாரணமாக விளங்கி வருகிறது. ஆம்; இந்த ஊரில் காலம்காலமாக யாருமே புகைப்பிடிப்பதில்லை. ஊருக்குள்வரும் வெளியாட்களும் புகைக்கமாட்டார்கள். ஊருக்குள் எப்படிப்பட்ட அதிகாரிகள் வந்தாலும் ஊரின் கட்டுப்பாட்டைக் கேள்விப்பட்டு அவர்களும் புகைக்கமாட்டார்கள்.அப்படிப்பட்ட ஊரில்தான் விநாயகர், திரௌபதையம்மன், மாரியம்மன், சிவன், பெருமாள், காளியம்மன், முருகன் என அனைத்து தெய்வங்களும் தனித்தனியாகக் கோவில் கொண்டுள்ளனர். தென்திருக்காளத்தீஸ்வரருக்கு ஆலயம் எழுப்பத் தயாராகிவருகிறார்கள் ஊர்மக்கள். இறைத்தூய்மை, புறத்தூய்மை (புகை), மனத்தூய்மை பெற்றுள்ளவர்களாக விளங்கிவருகிறார்கள். இந்த கிராமம் விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில், சூரப்பட்டு பஸ்டாப்பிலிருந்து வடக்கே ஆறு கிலோமீட்டரில் உள்ளது. அனைத்து போக்குவரத்து வசதிகளும் உள்ளன. வித்தியாசமான ஏழு செம்பொன்னுக்கு போய்வரலாமே.