"காலையில் பூத்தால் மாலையில் வாடிவிடுவோம்' என நினைத்து பூக்கள் பூப்பதில்லை. "இன்று பூத்து மணம் வீசி அனைவரையும் மகிழ்விப்போம்' என்ற நம்பிக்கையில்தான் பூக்கின்றன. மனித வாழ்வும் அப்படிதான். வாழும் இந்த நொடி மட்டுமே நிஜம் என்பதை உணர்ந்தாலும், ஆசைகளும் தேவைகளும் அதிகப்படியாகதான் இருக்கின்றன. ஒருவேளை சோற்றுக்குக்கூட வழியில்லாமல் சாலையில் திரியும்போது ஆறுதலுக்கு யாரும் இருக்கமாட்டார்கள். அதேவாழ்வில் உயர்வும் பெயரும் புகழும் வரும்போது உண்ண நேரமிருக்காது. சுதந்திரமாக வீட்டைவிட்டு வெளியே வரக்கூட முடியாது. கைதிக்கு ஸ்பெஷல் அறை கொடுத்தது போலிருக்கும் வாழ்க்கை. நேரத்திற்கு சாப்பிட்டோம், சுகமாக வாழ்ந்தோம் எனக் கூறுபவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இவையனைத்தையும் அவரவரின் ஜனன ஜாதகமே நிர்ணயிக்கின்றது.
லக்னாதிபதி கேந்திர திரிகோண ஸ்தானாதிபதிகளின் சேர்க்கைப் பெறுவது சிறப்பு. லக்னாதிபதி சேர்க்கைப்பெறும் கிரகங்கள் சுபகிரகம் மட்டுமின்றி, லக்னாதிபதிக்கு நட்பு கிரகமாகவும் இருக்கவேண்டும். நவகிரகங்களில் குரு, சுக்கிரன், சுபர் சேர்க்கை பெற்ற புதன், வளர்பிறைச் சந்திரன் ஆகியவை இயற்கை சுப கிரகங்கள். சூரியன், செவ்வாய், சனி, ராகு- கேது, அசுபர் சேர்க்கைப்பெற்ற புதன், தேய்பிறைச் சந்திரன் ஆகியவை இயற்கை பாவகிரகங்கள் ஆகும்.சூரியன், குரு, செவ்வாய், சந்திரன் ஆகிய கிரகங்கள் ஒன்றுக்கொன்று நட்பு. அதேபோல சுக்கிரன், சனி, புதன் ஆகிய கிரகங்களும் ஒன்றுக்கொன்று நட்பு. நட்பு கிரகங்கள் ஒன்றுக்கொன்று இணைவதும், ஒருவர் வீட்டில் மற்றொருவர் அமைந்து பரிவர்த்தனைப் பெறுவதும் நல்ல யோகத்தை உண்டாக்கும். லக்னத்தில் சுபர் இருந்தால் சிறப்பென்றாலும், சுபகிரகமான குரு- மேஷம், கடகம், சிம்மம் போன்ற லக்னங்களில் பிறந்தவர்களுக்கு லக்னத்திலேயே அமையும்போது ஏற்படுத்தும் பலன் ஒருவிதமாகவும், ரிஷபம், துலாம் போன்ற லக்னங்களில் பிறந்தவர்களுக்கு லக்னத்தில் அமையும்போது ஏற்படுத்தும் பலன் ஒருவிதமாகவும் மாறிவிடும்.