"தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி"
என்ற திருவாசகம்மூலம் உணரலாம். சைவமும் தமிழும் தழைத்தோங்க மடங்களும் ஆதீனங்களும் பெரிதும் பாடுபட்டன.புராணங்கள் பதினெட்டு, சித்தர்கள் பதினெட்டு போன்று சைவ ஆதீனங்கள் பதினெட்டு உண்டு. "சுத்த சைவ பதினெண் ஆதீனங்கள்' என்று கூறுவார்கள். பதினேழு ஆதீனங்கள் (மடம்) தமிழ்நாட்டிலும், ஒரு ஆதீனம் "வரணி ஆதீனம்' எனும் பெயரில் இலங்கை யாழ்ப்பாணத்திலும் உள்ளன. சைவ மடங்களில் முதலாவது திருவாவடுதுறை ஆதீனம். தேவாரப்பாடல் பெற்ற தலமான திருவாவடுதுறையில் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு நமசிவாய மூர்த்தி என்பவரால் மடம் நிறுவப்பட்டது. பாரத நாடு சுதந்திரம் பெற்ற தருணத்தில் இவ்வாதீனம் செய்த மகத்தானப் பணி போற்றுதலுக்குரிய ஒன்றாகும். இது தமிழகத்துக்குக் கிடைத்த அரிய வாய்ப்பு.
இந்த ஆதீனத்தில் நான்காவது குருமகா சந்நிதானமான ஸ்ரீ உத்திரகோடி தேசிகர் அருளாட்சிக் காலத்தில், மதுரைப் பகுதியை அரசாண்ட சிற்றரசனான முத்து வீரப்பநாயக்கர் ஈசானத் தம்பிரான் பெயரில் ஆதீனத்திற்கு எட்டு மடங்களுக்கு வேண்டிய நிலங்களை அளித்தான். அதேபோன்று 1615-ல் சிவந்திபுரம், சங்கரன்கோவில், புளியங்குடி, வாசுதேவநல்லூர் ஆகிய ஊர்களில் புதியதாக கிளை மடங்களை ஏற்படுத்த உதவி செய்தான். 1621-ல் நெல்லை ஈசான மடம் என்கிற கிளை மடம் உருவாக்கப்பட்டதாக ஆதீனத்தின் செப்பேடு தெரிவிக்கிறது.பன்னிரண்டாவது குருமகா சந்நிதானமான ஸ்ரீ திருச்சிற்றம்பல தேசிகர் (1730-1770), இராமநாதபுர சமஸ்தானத்தில் மழையில்லாமல் மக்கள் துன்பப்பட்ட நேரத்தில் மழைப்பதிகங்களை மேகராகக் குறிஞ்சி ராகத்தில் .ஓதுவார்களைக் கொண்டு பாடச்செய்து மழையை வரவழைத்தார். இதனால் மகிழ்ந்த சேதுபதி மன்னர் திருப்பொற்கோட்டை என்ற ஊரை ஆதீனத்திற்கு 1733-ஆம் ஆண்டு வழங்கினார்.