ADVERTISEMENT

ராஜபக்சேவின் வெற்றியும்... பிரதமர் மோடியின் வாழ்த்தும்...

11:15 AM Aug 07, 2020 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

இலங்கை நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. மொத்தம் 225 இடங்களைக் கொண்ட அவைக்கு 196 இடங்களுக்கான தேர்தல் நடந்தது. மீதமுள்ள இடங்கள் கட்சியின் வாக்கு விகிதத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட இருக்கின்றன. கரோனா அச்சுறுத்தல் காரணமாக இருமுறை தேர்தல் தள்ளிப்போயிருந்ததால் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இம்முறை நடைபெற்றது. ராஜபக்சே தலைமையிலான இலங்கை பொதுஜனக்கட்சி, சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி, ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சிகளுக்கும் இடையே மும்முனைப் போட்டி நிலவியது. பெரும் எதிர்பார்ப்பு மற்றும் பலத்த பாதுகாப்புகளுக்கு இடையே நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது.

அதில் ராஜபக்சே தலைமையிலானக் கூட்டணி 150 இடங்களைக் கைப்பற்றியது. இவற்றுள் ராஜபக்சேவின் இலங்கை பொதுஜனக் கட்சி 145 இடங்களை தனித்து வென்றுள்ளது. சஜித் பிரேமதாசவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, முஸ்லிம் அமைப்புகளின் ஆதரவுடன் மொத்தம் 55 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 10 இடங்களைக் கைப்பற்றியது. மும்முனைப்போட்டியில் முக்கிய அணியாக இருந்த முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயின் கட்சி ஒரு இடத்தை மட்டும் கைப்பற்றி பெரும் சரிவை சந்தித்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் சகோதரர் மகிந்த ராஜபக்சே மீண்டும் பிரதமராக உள்ளார். தற்போது உலகத்தலைவர்கள் உட்பட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ராஜபக்சேவின் வெற்றி உறுதியானதும் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் அழைத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். இதனையடுத்து ராஜபக்சே இந்திய பிரதமர் மோடிக்கு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT