ADVERTISEMENT

பனிக்கரடிகளுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகத்திற்கே ஆபத்து... எச்சரிக்கும் ஆய்வாளர்கள்!

04:43 PM Nov 06, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

உலகப் பந்தின் தென்பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய கண்டமான அண்டார்டிகாவில் பனிப் பாறைகள் அதிகம் நிறைந்து காணப்படுகிறது. புவி வெப்பமயமாதலை இந்த பனிப்பாறைகள் தடுத்து வருகின்றன. ஆனால் மனிதனின் நவீன வாழ்வியல் முறைகள் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக வெப்பம் அதிகரித்து பனிப்பாறைகள் கொஞ்சம் கொஞ்சமாக உருகி கடல் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இப்படி கடல் மட்டம் உயர்வதால் பல நகரங்கள் மூழ்கும் அபாயம் உள்ளது. கடந்த மே மாதம் 20 ஆம் தேதி அண்டார்டிகாவில் 4,320 சதுர கிலோ மீட்டர் அளவு கொண்ட ஒரு பனிப்பாறை உடைந்து பிரிந்து கடலில் மிதக்கத் தொடங்கியது ஆய்வில் தெரியவந்தது. ஒப்பீட்டு அளவில் புதுதில்லி நகரத்தைப் போன்ற மூன்று மடங்கு அளவு பெரிதான இந்தப் பாறைக்கு ஏ76 எனப் பெயரிடப்பட்டது. இந்த பனிப்பாறையானது 170 கிலோ மீட்டர் நீளமும், 25 கிலோமீட்டர் அகலமும் கொண்டது. உலகமே கரோனாவை உற்றுநோக்கிக் கொண்டிருக்கும் சூழலில் அண்டார்டிகாவில் பனிப்பாறை உடைந்து கடலில் மிதப்பது சூழலியல் ஆர்வலர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் புவியின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் உயரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஐ.நா பருவநிலை மாற்றத்திற்கான குழுவில் புவியின் பருவநிலை மாற்றம் தொடர்பாக 234 விஞ்ஞானிகள் சமர்ப்பித்த மூன்றாயிரம் பக்கங்கள் கொண்ட அறிக்கையில் குறிப்பிடப்படும் அம்சமாக, வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் புவியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் உயரும். இதனால் மோசமான நிகழ்வுகளை மனிதகுலம் சந்திக்கும் என்றும், இயற்கை பேரிடர்கள் அதிகரிக்கும் என்றும், 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை வீசும் அனல் காற்று தற்பொழுது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை வீசுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு ஆகியவற்றின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் நிலைமை கைமீறிப் போய்விடும் எனவும் அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வெப்ப மயமாதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரும் வகையில் கிளாஸ்கோ பருவநிலை உச்சிமாநாடு நடைபெறும் இடத்திற்கு முன் 4,000 கிலோ எடைகொண்ட பனிக்கட்டியை உருகவிட்டு இயற்கை ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அண்டார்டிகாவில் பனிப் பாறைகள் உருகுவது பனிக்கரடிகளுக்கு மட்டும் பாதிப்பல்ல ஒட்டுமொத்த உலகத்திற்கே பாதிப்பு என்ற வாசகங்கள் அதில் இடம்பெற்றன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT