கடந்த 1993 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜெப் பெசோஸ் மற்றும் மக்கின்சி கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் தற்போது அதிகாரபூர்வமாக இருவரும் விவாகரத்துக்கு கையெழுத்திட்டுள்ளனர். இந்த விவாகரத்திற்காக ஜெப் பெசோஸ் தனது சொத்தில் இருந்து 32 பில்லியன் டாலர்கள் ஜீவனாம்சமாக தந்துள்ளார். இந்த தொகையானது இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் 2.5 லட்சம் கோடி ஆகும்.
அமெரிக்க சட்டப்படி விவாகரத்தின் போது கணவனின் சொத்தில் 50 சதவீதம் வரை மனைவி ஜீவனாம்சமாக பெற முடியும். அதன்படி ஜெப் பெசோஸ் சொத்து மதிப்பான 136 பில்லியனில் 68 பில்லியன் வரை அவரது மனைவிக்கு ஜீவனாம்சமாக கிடைக்கும் என சொல்லப்பட்டு வந்தது. ஆனால் அவரது மனைவி மக்கின்சி தனக்கு 25 சதவீதம் மட்டும் போதும் எனவும், மேலும் தனது பெயரில் இருக்கும் வேறு சில நிறுவனங்களில் பங்குகளையும் ஜெப் பெஸோசுக்கு தருவதாகவும் தெரிவித்துள்ளார். அமேசான் நிறுவனத்தின் தொடக்கத்திலும், வளர்ச்சியிலும் மக்கின்சிக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2.5 லட்சம் கோடி ரூபாய் கிடைத்ததன் மூலம் ஒரே நாளில் உலகின் மூன்றாவது மிகப்பெரிய பெண் பணக்காரராக மாறியுள்ளார் மக்கின்சி. அதே போல மனைவிக்கு இவ்வளவு பெரிய தொகையை ஜீவனாம்சமாக கொடுத்ததும் ஜெப் பெசோஸ் தான் இன்னும் உலகின் மிக பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.