ADVERTISEMENT

இரண்டு ரவுடி கும்பலிலும் தொடர்பில் இருந்தவர் கொலை செய்து புதைப்பு!

12:55 PM May 08, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி அருகேயுள்ள புதுக்கடை கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரது மகன் அன்பரசன் (25). இவர் புதுச்சேரி மாநிலம் கோர்க்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2 ஆம் தேதி வேலைக்காக வீட்டை விட்டு வெளியே சென்ற அன்பரசன் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் அவரை பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் ரெட்டிச்சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன அன்பரசனை தேடி வந்தனர். புதுக்கடை பகுதியில் இருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது சம்பவத்தன்று அன்பரசனை சிலர் அழைத்துச் சென்றது தெரியவந்தது. அந்த மூவரின் மொபைல் எண்ணுக்கு போலீசார் தொடர்பு கொண்டபோது 'ஸ்விட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்ததால் போலீசாருக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.

பின்னர் ரெட்டிச்சாவடி இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்களை போலீசார் தேடி வந்தனர். சி.சி.டி.வி கேமரா காட்சியில் பதிவாகி இருந்த அதே ஊரைச் சேர்ந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் புதுக்கடையை சேர்ந்த சந்தோஷ் (20) என்பது தெரியவந்தது. மேலும் அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அன்பரசனை கொன்று புதைத்ததும் தெரியவந்தது.

போலீசாரின் தொடர் விசாரணையில், புதுச்சேரி மாநிலம் கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த ரவுடிகளான அய்யனார் மற்றும் ஜோசப் இருவரும் தனித்தனி கோஷ்டிகளாக செயல்பட்டு வந்தனர். கொலை செய்யப்பட்ட அன்பரசன் அய்யனார் கோஷ்டியில் இருந்து வந்தார். அதேசமயம் கடந்த சில மாதங்களாக ஜோசப்புடன் அன்பரசன் தொடர்பில் இருந்து வந்ததாகவும், அய்யனார் தரப்பிலான தகவல்களை ஜோசப் தரப்பிற்கு ரகசியமாகப் பரிமாறியதாக அவர் மீது அய்யனார் தரப்பிற்கு சந்தேகம் ஏற்பட்டு கோபமும் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே கடந்த 2 ஆம் தேதி ஒரு வழக்கில் ஜோசப்பை ரெட்டிச்சாவடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து அன்றைய தினம் மாலை வேலைக்குச் சென்று திரும்பிய அன்பரசனை அய்யனார் கோஷ்டியினர் போன் செய்து புதுக்கடைக்கு வரவழைத்து சிங்கிரிகுடி வீரபத்திர சுவாமி கோவில் அருகேயுள்ள சுடுகாட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று மது அருந்தியுள்ளனர். போதை தலைக்கேறியவுடன் அன்பரசனை கட்டையால் தலையில் அடித்துக் கொன்று அவரது உடலை பைக்கில் வைத்து ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள சவுக்கு தோப்பில் குழி தோண்டி புதைத்துள்ளனர்.

போலீசில் சிக்கிய சந்தோஷ் அன்பரசனை கொன்று புதைத்த இடத்தை அடையாளம் காட்டினார். அதனைத் தொடர்ந்து கடலூர் வட்டாட்சியர் அபிநயா தலைமையிலான வருவாய்த்துறையினர் மற்றும் கனகசெட்டிகுளம் மற்றும் ஜிப்மர் மருத்துவக் குழுவினர் நேற்று காலை சம்பவ இடத்திற்கு சென்று, கொன்று புதைக்கப்பட்ட அன்பரசனின் சடலத்தை தோண்டி எடுத்து அங்கேயே பிரேதப் பரிசோதனை நடத்தினர்.

அதேசமயம் சம்பவ இடத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுப்பதற்காக கடலூர் எஸ்.பி ராஜாராம் தலைமையில் டி.எஸ்.பி கரிகால் பாரிசங்கர், இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். இந்தக் கொலையில் தொடர்புடைய மேலும் சிலர் சென்னையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் தனிப்படை போலீசார் சென்னைக்கு விரைந்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT