புதுக்கோட்டை, காமராஜ் நகர் கூட்டாம்புளி ஆகிய பகுதிகளில் பரப்புரை நடத்திய ஸ்டாலின் மதியம் தூத்துக்குடியில் உள்ள சத்யா ரெஸ்டாரண்ட்டில் ஒய்வு எடுத்தார். மாலை அவர் தன், பிரச்சாரத்தை தொகுதிக்குட்பட்ட வல்லநாடு கிராமத்திலிருந்து தொடங்குவதாக இருந்தது. அவரைப் பார்ப்பதற்காக வரவேற்பதற்காகவும் வல்லநாட்டின் நான்கு வழிச்சாலையின் இருபுறமும் கூட்டமிருந்தது. அது சமயம், ஆண்கள் பெண்கள் திமுக கொடியோடு ரோட்டோரமிருந்தார்கள்.
ஏ.டி.எஸ்.பி. வேடரத்தினம் தலைமையிலான போலீசார் பெண்களின் கூட்டம் நான்கு வழிச்சலைக்குச் செல்வதைத் தடுத்து அவர்களை கலியாவூர் சாலைக்குச் செல்ல வலியுறுத்தினர். ஆனால் நான்கு வழிச்சாலையின் இருபுறமும் பெண்கள் கூட்டம் அதிகமிருந்தது. போலீசார் போக்குவரத்தை சீர் செய்யாமலும், வேகமாகக் கடந்து செல்லும் வானகங்களைக் கண்டு கொள்ளாமலுமிருந்தனர். கடந்த 12 ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்திற்கு வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே போக்குவரத்தினை வேறுபகுதிக்கு மாற்றி விட்ட போலீசார் தற்போது ஸ்டாலின் பிரச்சாரத்தில் கூட்டம் அதிமாக இருந்தும் அவர்களை சாலை ஒரத்தில் கட்டுப்படுத்த முயற்சி செய்தார்களே தவிர குறைந்தபட்சம் போக்குவரத்தை மாற்றிவிடக் கூட ஏற்பாடு செய்யவில்லை.
இதனால் திடீரென்று பெண்களின் கூட்டம் சாலையிலமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் இந்தப் போராட்டத்தில் திமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமிபாண்டியன், டி.பி.எம்.மைதீன்கான் எம்.எல்.ஏ. உள்ளட்ட பலர் கலந்து கொண்டனர்.
மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து போக்குவரத்தை ஒரு வழியாக மாற்றி அமைத்ததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து, ஸ்டாலின் வரவேற்பதற்காகச் சென்றனர் இந்தச் சம்பவத்திற்குப் பிறகு வந்த ஸ்டாலின், அங்கு வேட்பாளரை ஆதாரித்து பிரச்சாரம் மேற் கொண்டார். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.