ADVERTISEMENT

சப் இன்ஸ்பெக்டர் மீது அவரது மனைவி பரபரப்பு புகார்..! 

04:07 PM Jun 18, 2021 | tarivazhagan

ADVERTISEMENT


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அவலூர்பேட்டை காவல் நிலையத்தில் தற்போது சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்துவருகிறார் இளங்கோவன் (35). இவரது மனைவி இந்துமதி (30). இவர், நேற்று (17.06.2021) மதியம் விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் உள்ளே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவரிடம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் நேரடியாக நடத்திய விசாரணையில், இந்துமதி கூறியதாவது; “2019ஆம் ஆண்டு எனக்கும் தற்போது அவலுர்பேட்டை காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரியும் இளங்கோவனுக்கும் திருமணம் நடந்தது.

ADVERTISEMENT

திருமணம் முடிந்த 5 மாதத்தில் எனது கணவர் பல்வேறு பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளது தெரியவந்தது. இது தொடர்பாக எங்களுக்குள் அடிக்கடி தகராறு, பிரச்சனை ஏற்பட்டுவந்தது. இதுகுறித்து எனது பெற்றோரிடம் தெரிவித்தேன். அவர்கள், ‘எல்லாம் சரியாகிவிடும்’ என்று கூறினார்கள். இதன் பிறகு எனது கணவர் இளங்கோவன், எனது பெற்றோரிடமிருந்து 100 சவரன் நகைகளை வரதட்சணையாக வாங்கி வருமாறு தகராறு செய்தார். எப்படி நமது மகளை வைத்து நல்ல முறையில் வாழ்வார் என்ற காரணத்தினால், எனது பெற்றோருக்கு சொந்தமான நிலத்தை எனது கணவர் பெயருக்கு எனது பெற்றோர் எழுதிக் கொடுத்தனர். அதன் மதிப்பு 2 கோடி ரூபாய். ஆனால், அதன் பிறகும் என்னுடன் வாழாமல் அவலூர்பேட்டையிலேயே தங்கியுள்ளார்.

அவர் ஆரோவில் காவல் நிலையத்தில் பணிபுரிந்தபோது சம்பாதித்த பணத்தில் நிலம், வீடு வாங்கியுள்ளார். அவை அனைத்தையும் அவரது தங்கை பெயரில் எழுதிவைத்துள்ளார். அவரது தங்கை கணவர், காஞ்சிபுரத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்கிறார். அவரும் எனக்கு கொலை மிரட்டல் விடுத்துவருகிறார். எங்கள் உறவினர்கள் பலமுறை அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி என்னோடு சேர்ந்து என் கணவர் வாழ்வதற்கு முயற்சி செய்தனர். அவர் ஒத்துவரவில்லை. இதற்கு மேலும் பொறுப்பதில் பயனில்லை என்று முடிவு செய்தேன். ஏற்கனவே இங்கு வந்து மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இரண்டு முறை புகார் அளித்தேன். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

இதன்பிறகு என் கணவர் என்னை மேலும் சித்திரவதை செய்ய ஆரம்பித்தார். குடும்ப வாழ்க்கை என்பதால் அனைத்தையும் பொறுத்துக்கொண்டிருந்தேன். இனி எனது கணவருடன் சுமுகமான முறையில் சேர்ந்து வாழவைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், அவர் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மனைவி இந்துமதி கூறினார்.

அவர் இளங்கோவனுடன் திருமணம் செய்துகொண்ட புகைப்படம் ஆகியவற்றை இணைத்து மாவட்டக் காவல்துறை அலுவலகத்தில் புகார் அளித்துவிட்டுச் சென்றார். புகாரை வாங்கிய காவல்துறை அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொள்வதாக உறுதியளித்து அவரது மனைவியை சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் ஒருவர் மீது, அவரது மனைவியே பல்வேறு பரபரப்பான குற்றச்சாட்டுகளைக் கூறி புகார் அளித்துச் சென்ற சம்பவம் விழுப்புரம் மாவட்டக் காவல்துறையில் மட்டுமல்ல பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT