ADVERTISEMENT

''இது ரவுடிகளுக்கான எச்சரிக்கை'' - திருச்சி காவல் ஆணையர் சத்தியப்பிரியா பேட்டி

04:36 PM Feb 20, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருச்சி அண்ணல் காந்தி அரசு மருத்துவமனையின் பின்புறம் உள்ள உய்யக்கொண்டான் கால்வாயை ஒட்டிய கரைப்பகுதியில் இன்று மதியம் உறையூர் காவல் நிலைய ஆய்வாளர் மோகன் மற்றும் காவலர் சிற்றரசு உள்ளிட்டவர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது, சந்தேகத்தின் அடிப்படையில் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த துரை மற்றும் அவரது சகோதரர் சோமு என்கிற சோமசுந்தரம் ஆகியோரிடம் விசாரணை செய்த போது, அவர்கள் கையில் வைத்திருந்த அரிவாளால் ஆய்வாளர் மோகன் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் சிற்றரசு, அசோக் ஆகியோரை வெட்டியதில் கையில் பலத்த காயம் ஏற்பட்டதால் காவல் துறையினர் துரை மற்றும் சோமு இருவரையும் காலில் துப்பாக்கியால் சுட்டு மடக்கிப் பிடித்தனர்.

இவர்கள் திருச்சி மேலகல்கண்டார்கோட்டை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி இளவரசன் புதுக்கோட்டையில் ஜாமீன் கையெழுத்திட சென்றபோது அவரை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த நிலையில், இவர்கள் மீது திருட்டு மற்றும் கொள்ளை கொலை என மொத்தம் 62 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது காயமடைந்த இரண்டு ரவுடிகள் மற்றும் 3 காவலர்கள் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாளை திருவாரூர் செல்லவிருக்கும் முதல்வர் ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி சென்று, அங்கிருந்து சாலை மார்க்கமாக திருவாரூர் செல்கிறார். இந்த நிலையில் தேடப்பட்டு வந்த இரு ரவுடிகள் இன்று திருச்சியில் துப்பாக்கிச் சூடு நடத்தி பிடிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் திருச்சியில் உள்ள ரவுடிகளின் மத்தியில் கிலியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட திருச்சி காவல் ஆணையர் சத்தியப்பிரியா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''பல்வேறு வழக்குகளில் குறிப்பிடப்பட்டுள்ளவர் துரைசாமி. அவருடைய தம்பி சோமு என்பவரும் அவருடன் இருந்துள்ளார். நிறைய நாட்களாக இவர்கள் தேடப்பட்ட குற்றவாளிகள். இவர்கள் மீது 60லிருந்து 70 வழக்குகள் உள்ளன. வாரண்ட் பெண்டிங் இருக்கிறது. சம்மன் பெண்டிங் இருக்கிறது. அவர்களை ஸ்பெஷல் டீம் தேடிக் கொண்டிருந்தார்கள். பிடிக்கச் சென்ற இடத்தில் போலீசாரை தாக்கியதால் பாதுகாப்பிற்காக இரண்டு முறை சுட்டுள்ளனர். இவர்கள் மீது கஞ்சா சம்பந்தப்பட்ட வழக்குகள் உள்ளன. ஏற்கனவே கோயம்புத்தூரில் ஒரு வழக்கும், பாலக்கரையில் ஒரு வழக்கும் உள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டினை ரவுடிகளுக்கான எச்சரிக்கையாகப் பார்க்கலாம். குற்றவாளிகளை தண்டனைக்குட்பட்டு கோர்ட்டில் சமர்ப்பித்து வழக்கை முடிக்க வேண்டும் என்று தான் நாங்கள் நினைக்கிறோம். ஆனால், போலீசை தாக்கினார்கள் என்றால் நிச்சயமாக அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுப்போம்'' என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT