Skip to main content

அதிர வைத்த திருச்சி நகை கொள்ளையின் முழு தகவல்...களத்தில் இறங்கிய போலீஸ்...அதிர்ச்சி ரிப்போர்ட்! 

Published on 05/10/2019 | Edited on 05/10/2019

- மகேஷ், பகத்சிங்

சுவரில் துளையிட்டு திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் ரூ.13 கோடி மதிப்புள்ள தங்க, வைர, பிளாட்டின நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. சி.சி.டி.வி. கேமராவில் சிக்காமல் இருக்க மிருக முகமூடி அணிந்தும், மோப்ப நாயை திசை திருப்ப மிளகாய்ப் பொடி தூவியும் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். எப்போதும் ஆட்கள் நடமாட்டம் இருக்கும் பகுதி. நான்கு காவலர்கள், 15 நாய்கள் என்று கொள்ளையர்களுக்கு சவாலாக நிறைய இருந்தும், லேசான மழைத்தூறலும், இடிக்கப்பட்டுக்கொண்டிருந்த பழைய கட்டிடத்தின் சத்தமும் சாதகமாக அமைந்திருக்கிறது.

 

incident



தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் கிளைகள் பரப்பி உள்ள மிகப்பெரிய நகைக்கடை சாம்ராஜ்யம் லலிதா ஜுவல்லரி. இதன் திருச்சி கிளை கடந்த 5 வருடங்களுக்கு முன்பு துவக்கப்பட் டது. சத்திரம் பேருந்துநிலையம் அருகே 160 பணியாட்களுடன் இயங்கிவரும் இக்கடையில் அக்டோபர் 1-ஆம் தேதி இரவில் 13 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளைபோன தகவல் கிடைத்ததில் இருந்தே... திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், துணை கமிஷனர்கள் மயில்வாகனன், நிஷா தலைமையிலான டீம் இவ்வழக்கை சவாலாக எடுத்துக்கொண்டு விசாரித்து வருகிறது.

 

incident



நள்ளிரவு 1:30 மணிக்கு கடையின் இடது பக்கம் முக்கால் அடி செங்கல் சுவரை கட்டர் உதவியுடன் துளைபோட்டு அதிகாலை 3:00 மணிக்கு உள்ளே நுழைந்திருக்கிறார்கள். நகைகளை கொள்ளையடித்துவிட்டு 4:30 மணிக்கு வெளியேறியிருக்கிறார்கள். துளை போடப்பட்ட இடத்திலிருந்து வலதுபக்கம் 20 மீட்டர் தொலைவில்தான் பள்ளியின் வாட்ச்மேன் இருக்குமிடம். அதேபோல் இடதுபக்கம் 20 மீட்டர் தொலைவில்தான் நகைக்கடையின் வாட்ச்மேன்கள் இருக்குமிடம். கரிகாலன், ஆன்ரின், அருள்மொழி, மகேஷ்வரன், ஆக 4 வாட்ச்மேன்களும் அரைமணி நேரத்திற்கு ஒருமுறை அந்தப்பகுதிக்கு வந்து கைரேகை வைக்கவேண்டும். இரவு முழுவதும் தூங்காமல் இருப்பதற்காக இப்படி ஒரு முறையை வைத்திருந்தும் அவர்கள் கவனிக்காமல் போனது இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது போலீசாருக்கு. துளைபோட்ட இடத்திலும், உள்ளேயும் மிளகாய்ப் பொடியை தூவி விட்டிருப்பதால் மோப்பம் பிடிக்க வந்த அர்ஜுன் நாய் கொஞ்சம் திணறி, கரூர் பைபாஸ் சாலைபக்கம் சென்று திரும்பிவிட்டது. கொள்ளையர்கள் பயன்படுத்திய வாட்டர் பாக்கெட், ஸ்குரூ டிரைவர், மிளகாய்த்தூள் பாக்கெட் மட்டும் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

incident



குழந்தைகள் விளையாட்டுக்காக அணியும் சிங்கம் முகமூடியை ஒருத்தனும், முயல் பொம்மை முகமூடியை இன்னொருவனும் அணிந்து, உடலின் வேறு எந்த பாகத்தையும் வெளியே தெரியாதபடி மறைத்து வந்து, எந்த பதட்டமும் இல்லாமல், கவனமாகவும் பதற்றமின்றியும் அதே நேரம் சுறுசுறுப்பாகவும் கொள்ளையடித்துள்ளதால் தொழில்முறை கொள்ளையர்கள் என்பது உறுதியாகியுள்ளது. கடந்த 6 மாதத்திற்கு முன்பு லலிதா ஜுவல்லரி கடைக்கு அடுத்துள்ள காலி இடத்தில், கோவிந்தராஜ் கண் மருத்துவமனை நிர்வாகம் ஒரு மாடிவரை கட்டிடம் எழுப்பி, பின்னர் இடித்து தரைமட்டம் ஆக்கியது. லலிதாவில் கொள்ளைச் சம்பவம் நடந்த சிலநாட்கள் முன்பு வரை இடித்துக்கொண்டிருந்தார்கள். இது கொள்ளையர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. இந்த இடத்தை வேறொரு ஜுவல்லரி கேட்டுவந்த நிலையில், அதற்கு வணிகரீதியான எதிர்ப்பு வந்தது. இதனால் வேறொரு கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


நகைக்கடையின் பின்புற பகுதி புனித ஜோசப் கல்லூரியின் மைதானம். இரவு நேரங்களில் அங்கே 15 நாய்களுக்கு மேல் இருக்கும். அந்த வழியாக யாரும் உள்ள நுழையவே முடியாது; ஆனால், சம்பவம் நடந்த அன்று இரவு லேசான மழைத்தூறல் இருந்ததால் நாய்கள் எல்லாம் கட்டிடங்களுக்குள் சென்றுவிட்டன. மேலும், கல்லூரியின் 175-ஆவது ஆண்டு விழா கொண்டாட்டம் நடந்துகொண்டிருப்பதால் இந்தியா முழுவதிலும் இருந்து பலரும் தொடர்ச்சியாக வந்து போய்க் கொண்டிருந்தனர். அதனால் அங்குள்ளவர்களின் கவனம் நிகழ்ச்சியிலேயே குவிந்திருந்தது. இதுவும் கொள்ளையர்களுக்குச் சாதகமாக அமைந்துள்ளது.

கடந்த 2011-ல் மலைக்கோட்டை அமர் ஜுவல்லரியில் ஷட்டரை திறந்து 31 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது. இதில், உத்தரபிரதேசத்தை சேர்ந்த மோகன்சிங் என்பவன் சிக்கினான். அவன்மூலம் 13 பேர் சிக்கி பெரும்பாலான நகைகளை மீட்டுள்ளனர் போலீசார். இக்கொள்ளை சம்பவமும் வெளிமாநிலத்தவர்களின் கை வரிசையாக இருக்குமோ என்ற சந்தேகத்தில், திருச்சி, தஞ்சை, புதுக் கோட்டை, கரூர் ஆகிய இடங்களில் வட இந்தியர்கள் ஓட்டலில் தங்கியிருக்கிறார்களா என்று 7 தனிப்படை போலீசார் சல்லடையாக தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

கம்பளிப் போர்வை விற்பதற்காக புதுக்கோட்டை டைமண்டு விடுதியில் தங்கியிருந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 6 இளைஞர்களை திருச்சிக்கு அழைத்து வந்து சந்தேகத்தின் பேரில் விசாரித்ததில், அவர்கள் பழைய கொள்ளையர்கள் என்பதும், நடந்துள்ள லலிதா கொள்ளையில் சம்பந்தம் இல்லை என்பதும் முதற்கட்டமாகத் தெரியவந்துள்ளது. கொலைத்தொழிலை கைவிட்டு, நகைக்கொள்ளையில் ருசி பார்த்து வரும் தமிழகத்தின் புது கும்பலின் பட்டியலையும் தயார் செய்து தீவிரமாக கண்காணித்து வருகிறது போலீஸ். வடநாட்டுக் கொள்ளையர்கள் மட்டும் தானா, வெளிநாட்டுக் கொள்ளையர்களும் இருக்கிறார்களா, மோடி-சீன அதிபர் விசிட்டுக்கும் இதற்கும் தொடர்புள்ளதா என எந்தக் கோணத்தையும் விட்டு வைக்காமல் அலசுகிறது காவல்துறை.

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.