ADVERTISEMENT

பெண்களிடம் வரம்பு மீறிய இளைஞர்! கண்டித்தவரை அடித்துக் கொன்ற அவலம்! 

11:14 AM May 07, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வீடூர் புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கேசவன்(30). அதே பகுதியைச் சேர்ந்த அலெக்சாண்டர்(25). வீடூர் புதுப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு குளத்தில் அந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற அலெக்சாண்டர், அந்தப் பெண்களிடம் ஆபாசமாகவும், தகாத வார்த்தைகளாலும் பேசி அந்த பெண்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த கேசவன், அலெக்சாண்டரை கண்டித்து அனுப்பிவிட்டு, அவர் வீட்டுக்கு சென்றிருக்கிறார்.


இதனால் ஆத்திரமடைந்த அலெக்சாண்டர், கேசவன் வீட்டில் தனியாக இருந்தபோது அவர் வீட்டிற்குள் சென்று ஆபாசமாக திட்டி கல்லால் அவரின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த கேசவனை அவரது உறவினர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.


தன் கணவர் தாக்கப்பட்டது குறித்து கேசவன் மனைவி, அலெக்சாண்டர் மீது விக்கிரவாண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அலெக்சாண்டரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கேசவன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.


கேசவன் இறந்த சம்பவத்தை கேள்விப்பட்ட வீடுர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஒன்று திரண்டு சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அலெக்ஸாண்டர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனக்கூறி மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீசார் மறியல் நடத்திய கிராம மக்களிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT