ADVERTISEMENT

கரோனாவால் ஒருவர் பலி... பீதியில் ஊரைவிட்டு வெளியேறிய கிராம மக்கள்..! 

11:51 AM May 06, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள கனகம்பாடி கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சி என்பவர் கடந்த ஒருவார காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் சில தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால், மருத்துவமனைகளின் சிகிச்சை பலன் அளிக்கவில்லை என்று கருதி வீடு திரும்பியுள்ளார். வீட்டின் அருகில் உள்ள பொதுமக்கள் அனைவரும் அவரது உடல் நிலையைப் பார்த்து அவருக்குக் கரோனா பாதிப்புதான் என்று கருதி, அவரது வீட்டு அருகில் கூட செல்லாமல், அவர் என்ன நிலையில் இருக்கிறார் என்று கூட பார்க்காமல், மருத்துவர்களுக்கும் தகவல் கொடுக்காமல், மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லாமல் இருந்துள்ளனர்.

மேலும், அவர் வீட்டிலேயே அடைந்து கிடந்திருக்கிறார். இந்நிலையில், கொளஞ்சி நேற்று (05.05.2021) இரவு எட்டு மணி அளவில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவருடைய மனைவி, 10 வயது பெண் குழந்தை, 8 வயது ஆண் குழந்தை என அனைவரும் கத்திக் கதறி அழுதனர். அதைப் பார்த்தும் அக்கம்பக்கத்தினர் யாரும் அருகில் கூட செல்லவில்லை. அரை மணி நேரத்தில் அவரது உயிர் பிரிந்துள்ளது. உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் யாரும் அவரது பிணத்தைக் கூட பார்க்க வரவில்லை. அவர்கள் பெரும் அச்சத்தில் இருந்ததால், ஊராட்சி நிர்வாகம் ஜே.சி.பி இயந்திரம் மூலம் அவரை மயானத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.

இதையடுத்து, கொளஞ்சி கரோனாவால் உயிரிழந்துள்ளார் என்ற பீதியில் ஊரைவிட்டு அலறி ஓடிய பொதுமக்கள் இதுவரை வீடு திரும்பவில்லை. தற்போது ஊரில் 10 சதவீத மக்கள் கூட இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தும் யாரும் இந்தக் கிராமத்தைப் பார்வையிட கூட வரவில்லை என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஒவ்வொரு வீட்டிலேயும் வயதானவர்களை மட்டும் விட்டுவிட்டு மீதி நபர்கள் அனைவரும் ஊரைவிட்டு வெளியேறி உள்ளனர். சுகாதாரத்துறை உடனடியாக இந்தக் கிராமத்தில் மருத்துவ முகாம் அமைத்து, தடுப்பூசி வழங்கி கிராமத்தை இயல்பு நிலைக்கு மாற்ற வேண்டுமென சமூக ஆர்வலர்களும் கிராம மக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT