Skip to main content

பட்டா பெயர் மாறுதலுக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம்; கையும் களவுமாக மாட்டிய வி.ஏ.ஓ

Published on 27/08/2022 | Edited on 27/08/2022

 

VAO arrested taking bribe changing Patta name

 

கடலூர் மாவட்டம் தோப்பிருப்பு கிராமத்தை சேர்ந்த விவசாயியான அன்பழகன் என்பவர் தனது தந்தை பெயரில் உள்ள பட்டாவை தனது பெயருக்கு மாற்றுவதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தார். இந்த நிலையில் தனது பெயர் மாறுதலுக்காக அவர் கொத்தட்டை கிராம நிர்வாக அலுவலர் பார்த்தசாரதியை அணுகிய போது பார்த்தசாரதி அன்பழகனிடம் லஞ்சம் கொடுத்தால்தான் பெயர் மாறுதல் செய்யப்படும் எனவும், அதற்காக ரூ 10,000 பணம் வேண்டும் எனவும் கேட்டிருக்கிறார்.

 

பணம் கொடுக்க விரும்பாத அன்பழகன் கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையில் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் கடலூர் லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி தேவநாதன் தலைமையிலான போலீசார் நேற்று(26.8.2022) இரசாயனம் தடவிய ரூ 10,000 பணம் கொடுத்து அனுப்பினர். இதனை லஞ்சமாக பார்த்தசாரதியிடம் அன்பழகன் கொடுத்தபோது அங்கு பதுங்கி இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பார்த்தசாரதியை பிடித்தனர். அதன்பிறகு அவரை கைது செய்து கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்த நிலையில் கடலூர் விஜயலட்சுமி நகரில் உள்ள அவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

 

தொடர்ந்து பார்த்தசாரதியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் இதுபோன்ற பல்வேறு விஷயங்களுக்காக லஞ்சமாக பெற்ற பணத்தில் கடலூர் கூத்தப்பாக்கத்தில் ஒரு வீடு, புவனகிரி வட்டத்தில் 30 ஏக்கர் நிலம் வாங்கியது தெரியவந்தது. அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தியதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன.

 

இதையடுத்து அவரை கடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கடலூர் மத்திய சிறைச்சாலையில் போலீசார் அடைத்தனர். மேலும் கிராம நிர்வாக அலுவலர் பார்த்தசாரதி வீடு, நிலம் வாங்கியது தொடர்பாக மேல் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு புவனகிரி வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், சர்வேயர், வருவாய் ஆய்வாளர் ஆகியோரை கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் அலுவலகத்திற்கு வருமாறு அழைத்தனர்.

 

அதன்பேரில் நேற்று(26.8.2022) புவனகிரி வட்டாட்சியர் ரம்யா, மண்டல துணை வட்டாட்சியர் பாலமுருகன், வருவாய் ஆய்வாளர், சர்வேயர் ஆகியோர் கடலூர் லஞ்ச ஒழிப்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் முன்பு ஆஜரானார்கள். அவர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கிராம நிர்வாக அலுவலர் பார்த்தசாரதி தொடர்பான பல்வேறு விவரங்களை கேட்டு பெற்றனர். அத்துடன் முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.