Skip to main content

சமூக வலைதளங்களில் காணொலியாக பரவிய இறந்த கணவரின் முன்பு இருந்து கதறி அழும் பெண்; உண்மையில் நடந்தது என்ன?

Published on 22/05/2021 | Edited on 22/05/2021

 

The woman who cried from the front of her dead husband, which was videotaped on social media; What really happened?

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்தவர் 49 வயது ராஜா. இவருக்கு கடந்த ஐந்தாம் தேதி கரோனா நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி அவரை கடலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 13 நாட்களாக சிகிச்சையில் இருந்துவந்த ராஜா நேற்று (21.05.2021) திடீரென உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரது மனைவி கயல்விழியும் அவரது உறவினர்களும் ராஜாவுக்கு சுவாசிப்பதற்காக பொருத்தப்பட்டிருந்த வெண்டிலேட்டரை எடுத்து வேறு ஒருவருக்குப் பொருத்திவிட்டனர் அதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு ராஜா உயிரழந்ததாக குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து அவரது மனைவி கயல்விழி கதறி அழுதபடியே பேசும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அந்த வீடியோ காட்சியில் பேசிய கயல்விழி, “எனது கணவர் சிகிச்சையில் இருந்தபோது திடீரென ஒரு டாக்டர் வந்து எனது கணவர் முகத்தில் பொருத்தப்பட்டிருந்த வெண்டிலேட்டரைக் கழற்றினார், நான் அந்த டாக்டரிடம் அவர் சுவாசிப்பதற்கு சிரமப்படுகிறார், அதைக் கழட்டாதீர்கள் என்று பலமுறை சொல்லி மன்றாடினேன். அவர் கேட்காமல் அந்த வெண்டிலேட்டரை எடுத்துச்சென்றுவிட்டனர்.

 

இதனால் என் கணவர் சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறினார். நான் அவரது நெஞ்சில் கைவைத்து பார்த்தபோது சிறிதளவு மட்டுமே மூச்சு வந்தது. உடனே நான் மருத்துவரிடம் ஓடிச் சென்று அவரை வந்து கவனிக்குமாறு கதறி அழுதபடியே கூறினேன். ஆனால் யாரும் அவரை வந்து பார்க்கவில்லை அலட்சியமாக இருந்தனர். அதனால்தான் என் கணவர் இறந்துபோனார். நான் என் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு என் குழந்தைகளுடன் ஆதரவற்று நிற்கிறேன்” என்று கதறி அழுதபடியே கூறுகிறார். இவர்களுக்கு சிவசூரியன் என்ற மகனும் சுதர்ஷினி என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் ராஜாவின் இறப்பிற்கு நியாயம் கேட்டு அவரது உறவினர்கள் மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், ராஜாவின் உடலைப் ப்ளாஸ்டிக் பையில் வைத்து சுற்றப்பட்டு அடக்கம் செய்வதற்கு மருத்துவர்கள் ஏற்பாடு செய்தனர். ஆனால் அவரது மனைவியும் உறவினர்களும் ராஜாவின் உடலை நேரடியாக சுடுகாட்டுக்கு கொண்டு செல்லக்கூடாது, எங்கள் வீட்டுக்குத்தான் கொண்டு செல்ல வேண்டுமென்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

 

இதுகுறித்த தகவல் அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று ராஜாவின் மனைவி, அவரது உறவினர்கள் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் உடன்பாடு எதுவும் ஏற்படாததால் மருத்துவமனை ஊழியர்கள் அவரது உடலை மருத்துவமனையிலேயே பாதுகாத்து வைத்துள்ளனர். ராஜாவின் முகத்தில் பொருத்தப்பட்டிருந்த வெண்டிலேட்டரை டாக்டர் ஒருவர் அகற்றியதால்தான் ராஜா உயிரிழந்தார் என்ற குற்றச்சாட்டு குறித்து கடலூர் அரசு மருத்துவமனை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அதில் “கடந்த 15 நாட்களாக கரோனா சிகிச்சை வார்டில் ராஜா சிகிச்சை பெற்றுவந்தார். கடந்த 13 நாட்களாக அவருக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. கடந்த இரண்டு நாட்களாக அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் அவ்வப்போது அவர் உணவு உண்பதற்கு அந்த வெண்டிலேட்டர் இயந்திரத்தை அகற்றிவிட்டு உணவு சாப்பிடுவார். அதன்படி நேற்று அவர் உணவு சாப்பிடுவதற்காக வெண்டிலேட்டரை வெளியே எடுத்து வைத்துவிட்டு உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற டாக்டர் ஒருவர் அந்த வெண்டிலேட்டரை மாற்றிவிட்டு புதிய வெண்டிலேட்டரை அவருக்குப் பொருத்துவதற்காக அவரது மனைவியிடம் சொல்லிவிட்டுத்தான் எடுத்துச் சென்றார். 

 

cuddalore

 

இந்த நிலையில் ராஜா உயிரிழந்துள்ளார். அவர் இறப்பிற்கு மருத்துவர்களின் அலட்சியம் காரணம் இல்லை, ராஜாவின் மனைவி கூறுவது போன்று அவருக்குப் பொருத்தப்பட்ட வெண்டிலேட்டரை எடுத்து வேறு நோயாளிக்குப் பொருத்தப்பட வேண்டிய அவசியமில்லை. மருத்துவமனையில் நிறைய வெண்டிலேட்டர் இயந்திரங்கள் இருப்பில் உள்ளன. அப்படியிருக்கும்போது மற்றொருவருக்கு அதை எடுத்துமாற்ற வேண்டிய அவசியமில்லை” என்று மருத்துவமனை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். ராஜாவின் மனைவியின் குற்றச்சாட்டுக்கு மருத்துவமனை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளபோதிலும், இருதரப்பிலும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அதற்கான விளக்கம் குறித்து உயர் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி, உண்மையில் என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்கிறார்கள் கடலூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள்.

 

மேற்படி திட்டக்குடி ராஜா என்பவர் கரோனா சிகிச்சையில் கடலூர் அரசு மருத்துவமனையில் இருந்தபோது கடலூர் டாக்டர் ஒருவர் அவரது ஆக்சிஜன் குழாயை எடுத்ததால்தான் இறந்தாரா என்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதில் உரிய விசாரணை நடத்த வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், இந்த தகவல் கிடைத்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அதிகாரிகளைக் கொண்டு முறையான விசாரணை செய்து அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், தொழிலாளர் நலத்துறை அமைச்சரும் திட்டக்குடி எம்.எல்.ஏவுமான கணேசன் அவர்கள் நேற்று திட்டக்குடி சென்று, இறந்துபோன ராஜாவின் வீட்டிற்கு சென்று அவரது மனைவி கயல்விழி மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் உரிய விசாரணை செய்யுமாறு மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தக் குடும்பத்தினரிடம் கூறி ஆறுதல்படுத்தினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.