விபத்து நேர்வதற்குக் காரணமானவர்கள்மீது அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் சுபஶ்ரீயின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டுமெனவும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டுமெனவும் தமிழக அரசுக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
விளம்பரத் தட்டிகள், சுவர் விளம்பரங்கள், கொடி தோரணங்கள் ஆகியவை தொடர்பாக காவல்துறை ஓரவஞ்சனையான அணுகுமுறைகளைப் பின்பற்றுகிறது. குறிப்பாக, ஆளுங்கட்சியினருக்குத் தாராளமான சுதந்தரத்தை அளிக்கிறது. எந்தக் கட்டுப்பாடுகளும் விதிப்பதில்லை. உயர்நீதிமன்ற ஆணைகளையும் பொருட்படுத்துவதில்லை. சாலைகளை மறித்து குறுக்கும் நெடுக்குமாக விளம்பரப் பாதாகைகளை வைக்க அனுமதிக்கிறது. போக்குவரத்து இடையூறுகளைப் பற்றியும் கிஞ்சித்தும் கருத்தில் கொள்வதில்லை. அனைத்து அத்துமீறல்களையும் அனுமதிப்பது எழுதப்படாத விதியாக உள்ளது.
பல்லாவரத்திலும் இதே அணுகுமுறையைத்தான் காவல்துறை கையாண்டுள்ளது. அதன் விளைவாகவே சுபஶ்ரீயின் சாவு என்பதை அறிய முடிகிறது. எனவே இந்தப் பலிக்கு அரசும் காவல்துறையுமே பொறுப்பு ஏற்க வேண்டும். அத்துடன், விபத்துக்குக் காரணமாகும் வகையில் அலட்சியமாக செயல்பட்டுள்ள அரசியல் கட்சியினர் மற்றும் காவல்துறையினர் மீது அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இந்நிலையில், விடுதலைச்சிறுத்தைகளின் நிகழ்ச்சிகளில் விளம்பரத்தட்டிகள் அமைக்கும் போக்குகளை முற்றாக கைவிட வேண்டுமென இதன்மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.