ADVERTISEMENT

பாஜக சாலை மறியலால் சென்னை தி.நகரில் போக்குவரத்து பாதிப்பு!!! -பொதுமக்கள் அவதி!

04:55 PM Nov 06, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தடையை மீறி 'வேல் யாத்திரை' தொடங்கிய தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகனை போலீசார் கைது செய்தனர்.

வெற்றிவேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன், பிரத்யேக வாகனம் மூலம் வேல் யாத்திரையைத் தொடங்க, கடவுள் முருகனை வழிபட, கையில் வேலுடன் திருத்தணி கோயிலுக்குப் புறப்பட்டார். இந்த யாத்திரையில் ஹெச்.ராஜா உள்ளிட்ட பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களும் பங்கேற்றனர்.


வேல் யாத்திரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள நசரத்பேட்டைக்கு வந்தபோது தடுத்து நிறுத்திய போலீசார், திருத்தணி கோயிலுக்கு எல்.முருகனுடன் ஐந்து வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதியளித்தனர். அப்போது செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த எல்.முருகன், "தமிழகம் முழுவதும் திட்டமிட்டபடி வேல் யாத்திரை நடக்கும்" என்றார்.

அதைத் தொடர்ந்து, யாத்திரை பயணத்தைத் தொடங்கிய எல்.முருகன் கையில் வேலுடன் திருத்தணியில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்றடைந்தார். பின்பு, திருத்தணி முருகன் கோயிலில் எல்.முருகன், சாமி தரிசனம் செய்தார்.


அதைத் தொடர்ந்து, வேல் யாத்திரையைத் தொடங்க எல்.முருகன் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் திருத்தணியில் தடையை மீறி பா.ஜ.க தொடங்கிய வேல் யாத்திரையைத் தடுத்து நிறுத்திய போலீசார், தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகளைக் கைது செய்து பேருந்தில் அழைத்துச் சென்றனர்.

பா.ஜ.க.வின் வேல் யாத்திரையைத் தடுக்க திருத்தணியில் ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, பா.ஜ.க.வின் வேல் யாத்திரைக்கு அனுமதி மறுப்பு மற்றும் தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் கைது ஆகியவற்றைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி சாலை மேம்பாலத்தில், திடீரென திரண்ட பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனால் அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. மேலும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைக் கலைந்து செல்லச் செய்தனர். பாஜகவினரின் திடீர் சாலை மறியலால் போக்குவரத்து தடைப்பட்டு பொதுமக்கள் அவதியடைந்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT