Skip to main content

பாஜகவின் அகந்தைக்கு மக்கள் கொடுத்திருக்கும் எச்சரிக்கை!

Published on 25/10/2019 | Edited on 25/10/2019

மகாராஸ்டிரா பேரவைக்கு 2014ல் நடந்த தேர்தலில் பாஜக தனித்து சில சில்லறைக் கட்சிகளை சேர்த்துக்கொண்டு போட்டியிட்டது. 260 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 122 இடங்களை கைப்பற்றி தனிப்பெருங்கட்சியாக வந்தது. பதிவான வாக்குகளில் 27.8 சதவீதம் வாக்குளை பெற்றது. சிவசேனாவும் தனித்தே 282 தொகுதிகளில் போட்டியிட்டு 63 இடங்களில் வெற்றிபெற்றது. பதிவான வாக்குகளில் 19.3 சதவீதம் வாக்குகளை பெற்றது. காங்கிரஸ் கட்சி தனித்து 287 தொகுதிகளில் போட்டியிட்டு 42 தொகுதிகளையும் பதிவான வாக்குகளில் 18 சதவீதத்தையும் பெற்றது. தேசியவாத காங்கிரஸ் தனித்து 278 தொகுதிகளில் போட்டியிட்டு 41 தொகுதிகளையும் 17.2 சதவீத வாக்குகளையும் பெற்றது.

 

ஹரியானா மாநிலத்தில் 2014 சட்டப்பேரவை தேர்தலில் அகாலிதளத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. பாஜக 47 இடங்களையும் 33.2 சதவீத வாக்குகளையும் பெற்றது. அகாலிதளம் 1 இடத்தை பெற்றது. முந்தைய தேர்தலில் 40 இடங்களில் வெற்றிபெற்ற காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு 15 தொகுதிகளையும் 20.6 சதவீத வாக்குகளையும் பெற்றது. முந்தைய தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 31 இடங்களைப் பெற்ற இந்திய தேசிய லோக்தளம் 2014 தேர்தலில் 19 இடங்களையும் 24.1 சதவீத வாக்குகளையும் பெற்றது.

 

ஹரியானா ஜன்ஹித் காங்கிரஸ் 2 இடங்களையும் 3.6 சதவீத வாக்குகளையும், பகுஜன் சமாஜ் கட்சி 1 இடத்தையும் 4.4 சதவீத வாக்குகளையும் பெற்றன. 2014 தேர்தல் முடிவுகளைப் பார்த்தால் எதிர்க்கட்சிகள் இடையே ஒற்றுமை இல்லாததால் பாஜக வெற்றிபெற்றதை காணமுடியும். அதாவது மொத்தம் 33 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று 47 இடங்களைப் பெற்று ஆட்சியமைத்தது. அதாவது, பெரும்பான்மை வாக்காளர்களின் ஆதரவு இல்லாமலேயே ஆளுங்கட்சியாக இருந்திருக்கிறது.

 

2014ல் நடைபெற்ற மகாராஸ்டிரா, ஹரியானா தேர்தல்களுடன் 2019 சட்டப்பேரவை தேர்தல்களை ஒப்பிட்டால் பாஜகவின் வீழ்ச்சியை புரிந்துகொள்ள முடியும். 2019 மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை பெற்று இரண்டாவது முறையாக வெற்றிபெற்ற மோடியின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கும் பொருளாதார மந்தநிலைக்கும் மக்கள் சரியான பதிலை அளித்திருப்பதாகவே கருத வேண்டும்.

haryana and Maharashtra assembly election bjp peoples support

 

வெற்றிபெற்றதைப் போன்ற தோற்றத்தையும், மக்கள் தன்னுடைய நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருப்பதைப் போன்ற பில்டப்பை மோடி ஊடகங்கள் மூலம் உருவாக்கினாலும், உண்மை நிலை அதற்கு மாறாக இருப்பதை மோடியும் அமித்ஷாவும் உணர்ந்தே இருப்பார்கள். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கணக்கில் மோடி இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார் என்பதே நிஜம்.

 

நடந்து முடிந்த மகாராஸ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் கடந்த முறை தனித்தனியே போட்டியிட்ட பாஜகவும் சிவசேனாவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. அதுபோலவே, காங்கிரஸும் தேசியவாத காங்கிரஸும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இந்த போட்டியில் கடந்த முறை 122 இடங்களில் வெற்றிபெற்ற பாஜக இம்முறை 105 இடங்களையும் 25.8 சதவீத வாக்குகளையும் மட்டுமே பெற்றிருக்கிறது. சிவசேனாவோ, 56 இடங்களையும் 16.4 சதவீத வாக்குகளையும் மட்டுமே பெற்றிருக்கிறது.

 

இதற்கு மாறாக காங்கிரஸ் கட்சி 44 இடங்களையும் 15.9 சதவீத வாக்குகளையும், தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களையும் 16.7 சதவீத வாக்குகளையும் பெற்றிருக்கிறது. சுயேச்சைகளும் சிறியகட்சிகளும் சேர்த்து 29 இடங்களையும், 25.2 சதவீத வாக்குகளையும் பெற்றிருக்கின்றன.

 

ஆகமொத்ததில் இந்தமுறை பாஜக கூட்டணி 42 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற்றிருக்கிறது. இந்தக் கூட்டணிக்கு எதிராக 58 சதவீதம்பேர் வாக்களித்திருக்கிறார்கள் என்பதே நிஜம். பாஜக கூட்டணி வெற்றி பெற்றிருந்தாலும், கூட்டணி அரசு அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. அரசாங்கத்தில் சரிபாதி இடங்களையும் துணை முதல்வர் பதவியையும் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை இப்போதே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முன்வைத்திருக்கிறார். அத்துடன் ஆட்சியையும் இருவரும் தலா இரண்டரை ஆண்டுகள் பகிர்ந்துகொள்ளவும் நிபந்தனை விதிப்பார் என்று தெரிகிறது.

haryana and Maharashtra assembly election bjp peoples support

 

பாஜகவை ஆட்சி அமைக்க விடாமல் சிவசேனாவை எதற்கெடுத்தாலும் சார்ந்தே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதை மறைக்கப் பார்க்கிறார் மோடி. ஆனால், மகாராஸ்டிராவில் ஐந்து ஆண்டுகள் அரசியல் நிலைத்தன்மை கெடும் என்பதும், எதிர்க்கட்சிகளின் கை பேரவையில் ஓங்கியிருக்கும் என்பதும் உண்மை.

 

ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் அகந்தைக்கும், தேசியவெறியேற்றும் போக்கிற்கும் மக்கள் சரியான பதிலடி கொடுத்திருக்கிறார்கள். இந்தத் தேர்தலில் நாடுமுழுவதும் நிலவும் பொருளாதார மந்தநிலை, வளர்ச்சி, விவசாயிகள் பிரச்சனை என்று எதையும் பாஜக விவாதிக்க மறுத்தது. மாறாக காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்ததையும், தேசிய குடியுரிமை பரிசீலனை சட்டத்தையும் தனது சாதனையாக மோடியும் பாஜக தலைவர்களும் முழங்கினார்கள்.

 

ஆனால், 18 மாநிலங்களில் பரவிய 51 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 2 மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் பாஜக பலத்த அடி வாங்கியதையும், இரண்டு மாநிலத் தேர்தல்களில் பாஜகவுக்கு ஏற்பட்ட பின்னடைவும் அந்தக் கட்சியின் சர்வாதிகார மனப்பான்மைக்கு சரியான பதிலடி கொடுத்திருக்கிறது என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

 

ஒட்டுமொத்தமாக பார்த்தால் பாஜகவின் தான்தோன்றித்தனமான நடவடிக்கையையும், தேசிய வெறியையும் பெரும்பான்மையான மக்கள் நிராகரித்திருக்கிறார்கள். இனியேனும் பெரும்பான்மை மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப தனது போக்கை பாஜக திருத்திக்கொள்ளுமா என்பது போகப்போகத்தான் தெரியும். காங்கிரஸையோ, மற்ற மாநில கட்சிகளையோ மொத்தமாக அழித்துவிட வேண்டும் என்ற பாஜகவின் விருப்பத்துக்கும் சேர்த்தே இந்தத் தேர்தல்கள் மரண அடி கொடுத்திருக்கின்றன. மொத்தத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் பாஜக துடைத்தெறியப்படும் என்பதையே இந்தத் தேர்தல் முடிவுகள் மீண்டும் நிரூபித்திருக்கின்றன.


 

சார்ந்த செய்திகள்

Next Story

வங்கி மோசடி புகார்; அஜித் பவார் மனைவி மீதான வழக்கு மூடிவைப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Closing the case against Ajitpawar's wife on Complaint of bank fraud

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. அதன்படி, மொத்தம் 48 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் 5 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஏற்கனவே முதற்கட்டமாக மகாராஷ்டிராவில் 5 தொகுதிகளுக்கு கடந்த 19ஆம் தேதி நடத்தப்பட்டது. இதனையடுத்து, மீதமுள்ள 8 தொகுதிகளுக்கு வரும் 26ஆம் தேதி அன்று இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமாய் நடைபெற்ற வந்த நிலையில், இன்று (24-04-24) மாலை தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. 

மகாராஸ்டிரா மாநிலத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா மற்றும் பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அக்கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் மற்றும் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேர், பா.ஜ.க மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து, மகாராஸ்டிரா துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவி ஏற்றுக் கொண்டார். அவரது அணியைச் சேர்ந்த 8 பேர் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர்களாகப் பதவி ஏற்றுக்கொண்டனர். துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு நிதி மற்றும் திட்டமிடல் துறை வழங்கப்பட்டது. அதேபோல், அவரது அணியைச் சேர்ந்த 8 அமைச்சர்களுக்கும் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன.

தேசியவாத காங்கிரசில் பிளவு ஏற்பட்ட நிலையில் தங்களுக்கே கட்சி சொந்தம் எனத் தேர்தல் ஆணையத்தில் சரத்பவார், அஜித் பவார் தரப்பில் முறையிடப்பட்டது. இதனையடுத்து, அஜித் பவார் தலைமையிலான கட்சியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் எனத் தேர்தல் ஆணையம் அங்கிகரித்துள்ளது. அதேபோல் கட்சியின் கடிகாரம் சின்னத்தை அஜித்பவார் பயன்படுத்திக் கொள்ளவும் எனவும் தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

அதே வேளையில், நடைபெறவிருக்கிற மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிரா, பாராமதி மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க கூட்டணியில் இருக்கிற அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளராக அம்மாநில துணை முதல்வர் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் போட்டியிடுகிறார். இதற்கிடையே, ரூ.25,000 கோடி கூட்டுறவு வங்கி மோசடி வழக்கில், அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கை குற்றப்பிரிவு காவல்துறை நடத்தி வந்தது. இந்நிலையில், வங்கி மோசடி வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சுனேத்ரா பவார் மீது எந்தவித ஆதாரம் இல்லை என்றும், அவர் மீது குற்றமில்லை என்றும் வங்கிகளுக்கு பணம் இழப்பே இல்லை எனவும் மாநில பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை அறிக்கை சமர்பித்து வழக்கை மூடியுள்ளது. 

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.