தமாகாவில் இருந்து வந்தவருக்கு இரண்டு பதவிகளை வழங்குவது என்ன நியாயம் என முன்னாள் அமைச்சரும் எம்,பியுமான வைத்தியலிங்கத்தையும், சிட்டிங் அமைச்சர் துறைக்கண்ணுவையும் கண்டித்து 30 க்கும் மேற்பட்டோர் அதிமுகவினர் அக்கட்சியில் இருந்து விலகியிருப்பது கும்பகோணம் அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.
தஞ்சை மாவட்டம் பாபநாசம், சுவாமிமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து முன்னாள் தமாக எம்,எல்,ஏ ராம்குமார், அவரது ஆதரவாளரான சுவாமிமலை சங்கர் உள்ளிட்ட சிலர் தமாகாவில் இருந்து விலகி அதிமுகவில் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்தின் முன்னிலையில் ஐக்கியமானார். அவர்கள் சேர்ந்து ஓராண்டுக்குள், கூட்டுறவு உள்ளிட்ட பதவிகள் வாரி வழங்கப்பட்டுள்ளன. நீண்ட காலமாக கட்சியில் இருக்கும் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து அமைச்சர் துறைக்கண்ணுவிடம் பலமுறை கூறியும் எந்தபதிலும் இல்லை என்பதால் கட்சியில் இருந்து விலகுவதாக கூறியுள்ளனர்.
இதுகுறித்து சுவாமிமலை திருமஞ்சன வீதியை சேர்ந்த அதிமுக அம்மா பேரவை நகர செயலாளர் ரவிச்சந்திரன், சுவாமிமலை அதிமுக பேரூர் செயலாளர் ரங்கராஜனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, " தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையைச் சேர்ந்தவர் சங்கர். இவர் கடந்த ஆண்டு திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். தொடர்ந்து மத்திய கூட்டுறவு சங்க இயக்குனர் பதவி, சந்திரசேகரபுரம் கூட்டுறவு பண்டகசாலையில் இயக்குனர் பதவி என இரண்டு பதவிகள் வழங்கப்பட்டது.
சுவாமி மலைப்பகுதியில் அதிமுகவில் இருந்து 30 பேர் விலகியதற்கு பின்னணியில் அமைச்சர் துறைக்கண்ணுவின் கைவரிசை இருப்பதாக அதிமுகவினர் கிசுகிசுக்கின்றனர். இதுகுறித்து அதிமுக வட்டாரத்தில் விசாரித்தபோது," முன்னாள் எம்எல்ஏ ராம்குமார் வைத்தியலிங்கத்தின் ஆதரவாளராக இருக்கிறார். அதுபோல ராம்குமாரின் ஆதரவாளரான சங்கரும் வைத்தி ஆதரவாக இருக்கிறார். அதனால் தனக்கு எதிராக ஒரு அரசியல் லாபியை இவர்கள் நடத்தி வருகிறார்கள் என துரைக்கண்ணு பலமுறை தனது ஆதரவாளர்கள் சிலரிடம் ஆதங்கப்பட்டிருக்கிறார்.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்தின் சிபாரிசின்படி கும்பகோணம் நகர செயலாளர் ராமநாதன் இந்தப் பொறுப்புகளை வழங்கியிருக்கிறார். இது அமைச்சர் துறைக்கண்ணுக்குத் தெரிந்து கடும் கோபத்துக்கு உள்ளாகி அவரது ஆதரவாளர்களான சிலரை கிளப்பிவிட்டு கட்சியிலிருந்து நீங்குவதாக புகார் அனுப்ப சொல்லியிருப்பதாக கூறுகிறார்கள். அதன்படியே 30 பேர் நீங்குவதாக அறிவித்துள்ளனர்." என்கிறார்கள்.