ADVERTISEMENT

சாலையோரம் இளம்பெண் எரித்துக் கொலை; கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

12:47 PM Apr 03, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கொளத்தூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து சிறிது தூரத்தில் உள்ளது சித்தேரி. அதன் கரைப்பகுதிக்கு நேற்று காலை ஆடு மாடு மேய்க்கச் சென்றவர்கள் கரைப்பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் பாதி எரிந்தும் எரியாத நிலையில் சடலமாகக் கிடந்ததைப் பார்த்துள்ளனர். இதனைத் தொடர்ந்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ், திருக்கோவிலூர் டிஎஸ்பி பழனி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், எரிப்பதற்கு முன் அப்பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளதும் அதன் பிறகு சடலத்தை தீ வைத்து எரித்துவிட்டு சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. ஆனால் அந்த பெண் குறித்தான எந்த விவரமும் தெரியாததால் போலீசார் மோப்ப நாயின் உதவியுடன் தீவிரமாகத் தேடி வந்தனர். ஆனால் மோப்ப நாய் எதையும் அடையாளம் காணவில்லை. இதனால் விசாரணையைத் தீவிரப்படுத்திய போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடையங்களை சேகரித்தனர்.

இந்த சம்பவம் குறித்து உண்மையைக் கண்டறிவதற்காக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் 5 தனிப்படை அமைத்து உத்தரவிட்டுள்ளார். மேலும் அப்பகுதியில் காணாமல் போன பெண்கள் குறித்த தகவல்களும் போலீசார் தரப்பில் சேகரிக்கப்படுகிறது. சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் பாண்டியன், கச்சராபாளையம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் பெண்ணை எரித்துக் கொலை செய்த குற்றவாளி யார்? என்பதை கண்டுபிடிப்பதில் தீவிரமாக உள்ளனர். இளம்பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு சாலையோரம் எரிக்கப்பட்ட சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT