kallakurichi pillayarkuppam pillayarkuppam land partition incident 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள பிள்ளையார் குப்பம் என்ற ஊரைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது 61). விவசாயியான இவரது மகன்கள் கமலக்கண்ணன் (வயது 41), இளையராஜா (வயது 37). கமலக்கண்ணனுக்கு திருமணம் நடந்து தனிக்குடித்தனம் இருந்து வருகிறார். இளையராஜாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவருக்கு பெண் தேடி வருகிறார்.

Advertisment

இந்த நிலையில் இளையராஜா தனக்கு திருமணம் செய்து வைக்கக் கோரி தந்தை ஏழுமலையிடம் அவ்வப்போது தகராறு செய்து வந்துள்ளார். இதேபோன்று 2019 ஆம் ஆண்டு தந்தை ஏழுமலைக்கும் மகன் இளையராஜாவுக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. திருமணம் செய்து வைக்க முடியாத தகப்பனார் ஏழுமலை மீது ஆத்திரம் அடைந்திருந்த இளையராஜா தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இது குறித்து திருநாவலூர் போலீசார் அப்போது வழக்குப் பதிவு செய்து இளையராஜாவை கைது செய்தனர். இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது இளையராஜா ஜாமினில் வெளியே வந்துள்ளார். இந்த நிலையில் இளையராஜாவுக்கும் அவரது சகோதரன் கமலக்கண்ணன் ஆகியஇருவருக்கும் இடையே பொதுவில் தந்தை விட்டுச் சென்ற எட்டு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.

Advertisment

அந்த நிலத்தை தனக்கும் பாதி பங்கு பிரித்துக் கொடுக்கும்படி அண்ணனிடம் கேட்டு அதன் காரணமாக இருவருக்கும் இடையே முன்விரோத தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் அண்ணன் தம்பிக்கு இடையே விரோதம் இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 10:30 மணி அளவில் சொத்து பங்கு பிரித்து தருவது தொடர்பாக அண்ணன் தம்பி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கமலக்கண்ணன் இளையராஜாவை அடித்து உதைத்துள்ளார். இதில் நிலை குலைந்து இளையராஜா கீழே விழுந்துள்ளார். பலமான அடிபட்டு கீழே விழுந்த இளையராஜாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்ற இளையராஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது குறித்து தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் சார் கொலை வழக்குப் பதிவு செய்து தம்பியை கொலை செய்த அண்ணன் கமலக்கண்ணனை கைது செய்தனர். இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பிள்ளையார் குப்பம் பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.