திருச்சி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தியாகி இம்மானுவேல் சேகரனின் புகழஞ்சலி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.
திருச்சி விமான நிலையம், வயர்லெஸ் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் இம்மானுவேல் சேகரன் புகழஞ்சலி விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலின், இம்மானுவேல் சேகரன் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், தேவேந்திர குல வேளாளர் அமைப்பினர், உதயநிதி ஸ்டாலினுக்கு வாள் ஒன்றை நினைவுப் பரிசாக வழங்கினார்கள்.
அதனைத் தொடர்ந்து, புதுக்கோட்டை சாலையில் உள்ள மாத்தூர் பகுதியில் நடைபெற்ற தேவேந்திர குல வேளாளர் புகழஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலின், அங்கு வைக்கப்பட்டிருந்த இம்மானுவேல் சேகரனின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், உதயநிதி ஸ்டாலினுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.