வேலூர் டூ சென்னை தேசிய தங்க நாற்கர சாலை மிகவும் பரபரப்பான சாலை. நிமிடத்துக்கு பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த சாலையில் செல்லும். வாலாஜா அடுத்த தேவதானம் என்கிற இடத்தில் நெடுஞ்சாலை ஓரம் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் 20க்கும் மேற்பட்ட சாக்கு மூட்டைகள் இருந்துள்ளன. பலரும் பார்த்துவிட்டு சம்மந்தமேயில்லாத இடத்தில் எதற்காக இத்தனை மூட்டைகள் உள்ளன என யோசித்தபடி கடந்து சென்றனர். ஒருசிலர் முன்வந்து நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து ராணிப்பேட்டை பிரிவு ரோந்து போலீசார் சம்பவயிடத்துக்கு வந்தனர்.
ADVERTISEMENT
அவர்கள் வந்து பார்த்து மூட்டையை பிரித்து பார்த்தபோது, அந்த மூட்டைகளில் அரசின் நியாய விலைக்கடையில் ஏழை மக்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் அரிசி இருந்துள்ளது. அதன்பின்னர் அது தொடர்பாக வருவாய்துறைக்கு தகவல் தந்தனர். அதனை தொடர்ந்து அவர்கள் வந்து சோதனை செய்து, புகார் பதிந்துவிட்டு அரிசி மூட்டைகளை கைப்பற்றி எடுத்து சென்றனர்.
ADVERTISEMENT
அந்த மூட்டைகளை எடையில் வைத்தபோது, 2 டன் அளவுள்ள அரிசி இருந்துள்ளன. இந்த மூட்டை எங்கு கொண்டு செல்ல இங்கு கொண்டு வந்து போடப்பட்டது. யார் கொண்டு வந்து இங்கு போட்டனர். இதற்கு முன்பு இந்த இடத்தில் இருந்து இதேபோல் எத்தனை டன் அரிசி கடத்தப்பட்டுள்ளன. இவ்வளவு அரிசி எப்படி கிடைத்தது என வருவாய்த்துறை, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போன்றவை விசாரணை நடத்திவருகின்றன.
Show comments