இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த திருச்சி மாநகர காவல் உதவி ஆணையர் நிவேதா லட்சுமி தலைமையிலான போலீசார், பாதிக்கப்பட்ட ஐயப்ப பக்தர்கள் சென்னா ராவ் சார்பில் தாக்குதல் சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டது. இதேபோன்று தன்னையும் ஐயப்ப பக்தர்கள் தாக்கியதாகப் பாதுகாப்புப் பணியில் இருந்த பரத் என்பவரும் புகார் கொடுத்தார். இரு தரப்பு புகார் மீதும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சூழலில், கோயிலில் பக்தர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், “ஆந்திராவைச் சேர்ந்த 34 பக்தர்கள் உண்டியலை மிகுந்த ஓசையுடன் அடித்தனர். அதோடு கோயில் பணியாளரையும் தாக்கியுள்ளனர். கோயில் பணியாளர் தலைமுடியைப் பிடித்து உண்டியலில் மோதச் செய்துள்ளனர். மற்ற பக்தர்களைத் தரிசனம் செய்யவிடாமல் இடையூறு செய்ததால் காவல்துறையில் புகார் அளித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள காயத்ரி மண்டபத்தில் பக்தர்கள் தாக்கப்பட்டதாக எழுந்த புகாரில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி கோயில் பாதுகாவலர்களான பாரத், செல்வகுமார் மற்றும் விக்னேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.