திருச்சியில் போக்குவரத்து வாகனங்கள் இடையூறின்றி செல்ல ANPR கேமரா மற்றும் சிசிடிவி கேமராக்களுடன் கூடிய தானியங்கி போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் தொடங்கி வைக்கப்பட்டது.
திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா, இ.கா.ப., திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையராக பொறுப்பேற்றதிலிருந்து திருச்சி மாநகரத்தில் போக்குவரத்து நெரிசலின்றியும், முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டும், சாலை விபத்துக்கள் குறைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சாலை விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு பல இடங்களில் போக்குவரத்து சிக்னல் அமைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.
திருச்சி மாநகரில் அடிக்கடி விபத்து நடக்கக் கூடியதாகக் கண்டறியப்பட்ட 31 இடங்களில் (Hotspots) 10 இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சஞ்சீவி நகரும் 31 இடங்களில் அடங்கும். இது தவிர சஞ்சீவி நகர் சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படும் என்பதைக் கண்டறிந்து இதைச் சீர் செய்யும் பொருட்டும், விபத்துகளைத் தடுக்கும் பொருட்டும் வாகன எண்களைக் கண்டறியும் உயர் ரக தானியங்கி ANPR கேமராக்கள் - 2, கண்காணிப்பு கேமராக்கள் - 6 மற்றும் ஒலிபெருக்கிகளுடன் கூடிய பொது விளம்புகை அமைப்பு (PA System) ஆகிய அம்சங்களுடன் கூடிய தானியங்கி போக்குவரத்து சிக்னலை திருச்சி மாநகர காவல் ஆணையர் M.சத்தியபிரியா, இ.கா.ப., நேற்று (24.05.2023) காலை பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் தொடங்கி வைத்தார். இதுபோன்று திருச்சி மாநகரத்தில் குற்றம் நடக்காமல் தடுக்க அதிக அளவில் கேமராக்கள் அமைத்து நடவடிக்கை எடுக்குமாறு காவல் துணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.